பிக்பாஸ் ஷூட்டிங் ரத்து.. மகாராஷ்டிர அரசியல் தலைவர் கொலையால் திடீர் பரபரப்பு! என்ன நடந்தது
மும்பை: மகாராஷ்டிர அரசியலில் முக்கிய தலைவர்களில் ஒருவர் பாபா சித்திக். இவர் நடத்தும் இப்தார் விருந்துகளில் பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொள்வார்கள். இவரை அடையாளம் தெரியாத சிலர் நேற்றைய தினம் சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் கிடைத்தவுடன் பாலிவுட் பிரபலம் சல்மான் கான் தனது பிக்பாஸ் ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு அங்கு விரைந்துள்ளார்.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் நேற்று நடந்த அரசியல் படுகொலை நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. என்சிபி கட்சியின் பாபா சித்திக் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டார்.

இதற்கிடையே இந்த துப்பாக்கி சூடு குறித்த தகவல் கிடைத்தவுடன் பிக் பாஸ் 18 ஷூட்டிங்கில் இருந்த பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கான் பதறிப் போய்விட்டாராம். மேலும்,பாபா சித்திக் உயிரிழந்துவிட்டார் என்பது தெரிந்த உடன் அவர் பிக்பாஸ் 18 ஷூட்டிங்கையே நிறுத்தியுள்ளார்.
சல்மான் கான்: பிக்பாஸ் 18 ஷூட்டிங்கில் இருந்த சல்மான கான், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு உடனடியாக பாபா சித்திக் அனுமதிக்கப்பட்டிருந்த மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனைக்கு விரைந்தார்.
66 வயதான பாபா சித்திக் நேற்றைய தினம் நள்ளிரவில் மும்பையின் பாந்த்ரா கிழக்கில் உள்ள அவரது மகன் ஜீஷன் சித்திக்கின் எம்எல்ஏ அலுவலகத்திற்கு வந்திருந்தார். வெளியே நின்றிருந்த அவரை அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த சித்திக் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதிர்ச்சி: பாபா சித்திக் பல்வேறு பாலிவுட் பிரபலங்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகி வந்தவர். அதிலும் குறிப்பாக நடிகர் சல்மான் கான் உடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தவர். இதன் காரணமாக உயிரிழப்பு குறித்த செய்தி கிடைத்தவுடன் அதிர்ந்து போனார் சல்மான் கான்.
தமிழைப் போலவே இப்போது இந்தியிலும் பிக்பாஸ் நடந்து வரும் நிலையில், அதை சல்மான் கான்தான் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் ஷூட்டிங்கில் இருந்த சல்மான் கானுக்கு சித்திக் மரணம் குறித்த தகவல் கிடைத்த உடன் நள்ளிரவு 12:30 மணியளவில் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு லீலாவதி மருத்துவமனைக்கு வந்தார். இது தொடர்பான போட்டோ வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
யார் இவர்: இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த பாபா சித்திக் மிகச் சமீபத்தில் தான் அஜித் பவாரின் என்சிபி கட்சியில் இணைந்தார். பாபா சித்திக் மகாராஷ்டிர அரசியலில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக அறியப்படுகிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் இடையே 2000களில் சண்டை ஏற்பட்டது. இருவரும் ஐந்து ஆண்டுகள் பேசிக் கொள்ளாமல் இருந்தனர். இருவரையும் சமாதானம் செய்து 2013இல் ஒரே மேடையில் ஏற்றியவர் பாபா சித்திக்.
இவரது மரணம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலை சம்பவம் குறித்து அம்மாநில போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக இந்த விவகாரத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான இருவரும் ஹரியானாவைச் சேர்ந்த கர்னைல் சிங் மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தரம்ராஜ் காஷ்யப் என்பது தெரிய வந்தது. அவர்கள் இப்போது சிறையில் உள்ள ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications