“பாம்” வெச்சிருக்கோம்! அதிர்ந்த ஆர்எஸ்எஸ்.. நாக்பூரில் உச்சக்கட்ட பதற்றம்! போலீசுக்கு வந்த “கால்”
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்து இருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது வெடித்து சிதறும் என்று நாக்பூர் காவல்துறைக்கு வந்த அழைப்பால் பெரும் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. மர்ம நபரின் மிரட்டல் கால் காரணமாக நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
நாட்டை ஆளும் பாரதிய ஜனதாவின் சித்தாந்த அமைப்பாக ஆர்.எஸ்.எஸ் கருதப்படுகிறது. அந்த அமைப்பின் தலைமையகம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அமைந்து இருக்கிறது.
பாஜகவின் எந்த ஒரு முடிவையும் நாக்பூரிடம் ஒப்புதல் பெற்றே எடுப்பதாக எதிர்க்கட்சி விமர்சிப்பது உண்டு. இப்படி அதிகார பலம் நிறைந்த அமைப்பாக ஆர்.எஸ்.எஸும், பாதுகாப்பு மிகுந்த பகுதியாக அதன் அலுவலக வளாகமும் உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். கோட்டை நாக்பூரில் பிரதமர் மோடி- ரூ 75,000 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
வெடிகுண்டு மிரட்டல்
எப்போதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்டதாகவே இருக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நாக்பூர் தலைமையகத்துக்கே நேற்று வெடிகுண்டு மிரட்டல் ஒன்று விடுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று மதியம் ஒரு மணியளவில் நாக்பூர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்து இருக்கிறது.
தொலைபேசியில் மர்ம நபர்
மறுமுனையில் பேசிய மர்ம நபர் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், அது வெடித்து சிதறும் என்றும் தெரிவித்தார். இதனை கேட்டவுடன் போலீசார் பரபரப்பு அடைந்தனர். உடனே ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் நோக்கி அதிக எண்ணிக்கையிலான போலீசார் விரைந்தனர்.
போலீசார் குவிப்பு
அவர்களோடு வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் அழைத்து செல்லப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டு இருந்த இடமும் தீவிரமாக சோதனைக்கு உட்பட்டது. பல மணி நேரம் நடத்திய தேடுதல் வேட்டையில் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தொலைபேசியில் அழைப்பில் தெரிவிக்கப்பட்ட வெடிகுண்டு அங்கு இல்லை.
புரளியை உறுதிபடுத்திய போலீசார்
இதனை அடுத்து ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக வந்த மிரட்டல், புரளி என்று போலீசார் முடிவுக்கு வந்தனர். பீதியை கிளப்ப வேண்டும் என்று விஷமிகள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
தீவிர விசாரணை
ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு இல்லாததால் சற்று ஆறுதல் அடைந்த போலீசார், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு தவறான தகவலை கொடுத்த நபர் யார் என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். புரளியை கிளப்பிய நபரை கைது செய்ய அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளார்கள்.
கூடுதல் பாதுகாப்பு
வெடிகுண்டு உள்ளே இல்லாவிடாலும், மிரட்டல் அழைப்பு வந்ததை தொடர்ந்து போலீசார் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் குவிக்கப்பட்டு இருக்கின்றனர். மகாராஷ்டிராவில் அதிகார பலம் பொறுந்திய ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கே செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.