சிபிஐ விரித்து காத்திருந்ததோ மீன் வலை.. சிக்கியதோ முதலைகள்.. நீட் தேர்வில் மெகா மோசடி
மும்பை : மகாராஷ்டிராவைச் சேர்ந்த கோச்சிங் நிறுவனம் ஒன்று நீட் தேர்வில் ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடமும் ரூபாய் 50 லட்சம் வாங்கிக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து 5 பேரை தேர்வு எழுத முயன்றது அம்பலமாகி உள்ளது. வலை விரித்து காத்திருந்த சிபிஐ, கடைசியில் கோச்சிங் சென்டர் அதிகாரிகள் 5 பேரை கைது செய்தனர்.
இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வு மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில் மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளதை மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) கண்டுபிடித்திருக்கிறது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆர்.கே.எஜூகேசன் கேரியர் கைடன்ஸ் பயிற்சி மையம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
நிறுத்துங்க.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு திமுக தலைமை எச்சரிக்கை? இளங்கோவன் பேட்டியின் பின்னணி
மருத்துவ கல்லூரி
இது தொடர்பாக ஆர்.கே.எஜூகேசன் கேரியர் கைடன்ஸ் பயிற்சி மையம், அதன் இயக்குநர் பரிமல் கோட்பள்ளிவார் மற்றும் பல மாணவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடம் இருந்தும் 50 லட்ச ரூபாய் வரை கல்வி நிறுவனம் வசூலித்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள எஃப்ஐஆரில், "பரிமல் கோட்பள்ளிவார் மோசடியான வழிகளைப் பின்பற்றி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கிறார். இதற்காக மாணவர்களின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு பெரும் பணத்தையும் பெறுகின்றன. பின்னர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடத்தப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது
மதிப்பெண் சான்றிதழ்
இதில் ஒப்புக்கொள்ளும் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து காசோலைகள், மாணவரின் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை கோச்சிங் சென்டர் வாங்கி வைத்துக்கொள்கிறது. மாணவரின் பெற்றோர் ரூ 50 லட்சத்தை அளித்த பின்னரே மதிப்பெண் சான்றிதழ் திரும்ப அளிக்கப்படுகிறது. சிபிஐ எஃஐஆரில் மேலும், "கோச்சிங் சென்டரில் இருப்பவர்கள் மாணவர்களின் விண்ணப்பங்களில் தேவையான மாற்றங்களைச் செய்து திட்டமிட்ட தேர்வு மையங்கள் கிடைப்பதை உறுதி செய்கின்றனர்.
போலி அடையாள அட்டை
ஆள் மாறாட்டம் செய்ய ஏதுவாக மாணவர்களின் விண்ணப்பத்தில் இருக்கும் புகைப்படங்களையும் அவர்கள் மாற்றியுள்ளனர். மாணவர்களின் ஆதார் அட்டையின் தகவல்களைக் கொண்டு போலியாக அடையாள அட்டையைத் தயார் செய்து தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சில மாணவர்களுக்கு விடை குறித்த தகவல்களை அளிப்பதாகவும் கோச்சிங் சென்டர் உறுதி அளித்திருந்தது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
காத்திருந்த சிபிஐ
இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வில் மொத்தம் ஐந்து மாணவர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்ய கோச்சிங் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அவர்களை கையும் களவுமாகப் பிடிக்க சிபிஐ அந்த தேர்வு மையங்களில் காத்திருந்தது. இருப்பினும், இந்த தகவலை எப்படியோ தெரிந்து கொண்ட கோச்சிங் நிறுவனம், அவர்களைத் தேர்வு எழுத மையங்களுக்கு அனுப்பவில்லை.
கோச்சிங் நிறுவனம்
எனினும் தேர்வு மையத்தை தேர்வு செய்து, அதில் ஹால் டிக்கெட்டில் போட்டோவை மாற்றி, போலி அடையாள அட்டைகளை உருவாக்கி, " ஆள் மாறாட்டம் செய்து வேறு நபர்களை" நீட் தேர்வு எழுத முயன்ற மகாராஷ்டிராவின் ஆர்.கே.எஜூகேசன் கேரியர் நிறுவனத்தின் ஐந்து பேரை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைது செய்துள்ளது. சமீபத்தில் JEE நுழைதேர்வில் இதே போன்ற மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சிபிஐ நடத்திய அதிரடி நடவடிக்கை எடுத்தது. அதே பாணியில் சிபிஐ தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
நீட் தேர்வு மோசடி
முன்னதாக நீட் தேர்வு நடந்த சமயத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்பூர் மற்றும் சிகார் பகுதிகளில் மாணவர்களுக்கு பதிலாக போலியான நபர்கள் மூலம், நீட் தேர்வு எழுதவைக்கும் கும்பல் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது . அதன் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீசார், இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து சில மருத்துவ மாணவர்கள் உட்பட 21 பேரை கைது செய்தனர்.
மாஸ்கில் மைக்
கைதானவர்களிடமிருந்து, சந்தேகிக்கும் வகையில் தைக்கப்பட்டு இருந்த ஏராளமான N-95 மாஸ்குகள் கைப்பற்றப்பட்டன. அவற்றை பரிசோதித்ததில் மாஸ்கிற்கு உட்பகுதியில், தகவல் தொடர்பு சாதனங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில், மாஸ்கிற்குள் சாதனங்களை மறைத்து வைத்தால் தேர்வறையில் யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் என்பதால், ஆன்லைனில் தகவல் தொடர்பு சாதனங்களை வாங்கி இந்த முயற்சியை மேற்கொண்டதாக கைதானவர்கள் தெரிவித்தார்கள்.
கண்காணிப்பாளர் உதவி
தேர்வு அறைக்கு வெளியே இருப்பவர்களை தொடர்பு கொள்ள மாஸ்கின் உட்பகுதியில் பேட்டரி மூலம் இயங்க கூடிய கருவியை பொருத்தியுள்ளனர். நானோ சிம் கொண்ட இந்த கருவியில் ஒரே பொத்தானை அழுத்துவதன் மூலம், அழைப்புகளை மேற்கொள்ள முடியும். வெளியே இருப்பவர்கள் பேசுவதை தேர்வு எழுதுபவர்கள் கேட்க, காதின் உட்பகுதியில் பொருத்தக்கூடிய சிறிய வடிவலான இயர்பீஸ்களையும் பயன்படுத்தியுள்ளது. ஜெய்பூரில் தேர்வறை கண்காணிப்பாளரின் உதவியுடன் மோசடியில் ஈடுபட்ட, தினேஷ்வரி குமாரி எனும் மாணவி உட்பட 8 பேரை போலீசார் நீட் தேர்வு நடந்த அன்று கைது செய்தனர். 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை வாங்கி கொண்டு ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வை சில கோச்சிங் சென்டர்கள் எழுத வைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.