குடும்பத் தகராறு.. கோபித்து கொண்ட மனைவி.. செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய கணவர்
மும்பை: குடும்பத் தகராறால் அம்மா வீட்டுக்குச் சென்ற மனைவியை, மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்கும்படி கணவர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆடி மாதம் பிறந்து விட்டது புதிதாக திருமணம் ஆன மனைவிகளையெல்லாம் கணவன்களிடம் இருந்து பிரித்து வைக்கின்றனர், ஆனால் பழைய கணவன்களுக்கு மட்டும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்க மாட்டேன் என்கிறதே என திருமணமான ஆண்கள் மீம்ஸ் போட்டு ஆதங்கப்பட்டு வரும் சூழ்நிலையில், சண்டை போட்டுச் சென்ற மனைவிக்காக கணவர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜால்னா மாவட்டத்தில் உள்ளது டபாதி கிராமத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

மனைவியின் கோபம்
இங்கு வாழும் கண்பத் பாகல் என்பவருக்கும், அவருடைய மனைவிக்கும் சமீபத்தில் குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால், அப்பெண் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. கண்பத்தும் தனது மனைவியை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்துள்ளார். ஆனால் அப்பெண் மீண்டும் அவருடன் வந்து வாழ மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

போராட்டம்
இதனால் சோகத்தில் இருந்த கண்பத், தன் மனைவியை எப்படியும் வீட்டிற்கு அழைத்து வந்தே தீருவது என முடிவெடுத்து அதிரடியாக ஒரு திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, தனது கிராமத்தில் இருந்த 100 அடி உயரமுள்ள செல்போன் டவர் மீது ஏறிய அவர், 'தன் மனைவியை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைத்தால் மட்டுமே கீழே இறங்கி வருவேன்' என அங்கிருந்து கூச்சலிட்டுள்ளார்.

போலீசுக்குத் தகவல்
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஊர் மக்கள், கண்பாலை சமாதானப்படுத்தி கீழே இறங்கி வரச் செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் அது தோல்வியடையவே, உடனடியாக இது குறித்து போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புவீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியே பரபரப்பாக மாறியது.

அறிவுரை
ஒருவழியாக போலீசாரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு, செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கியுள்ளார் கண்பால். அதன்பிறகு அவரைக் கைது செய்த போலீசார், பின்னர் அறிவுரை கூறி விடுவித்துள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்ற போது கண்பால் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகாவது அவரது மனைவி அவருடன் சேர்ந்தாரா என்பது பற்றி தகவல் இல்லை.

இப்டி பண்றீங்களே சார்..
ஆனால் இணையத்தில் இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட நெட்டிசன்கள், 'என் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா-னு எல்லோரும் ஜனகராஜ் மாதிரி சந்தோசப்படுவார்கள். ஆனால், இவரோ இப்படி பீல் பண்ணுகிறாரே..' எனக் கலாய்த்து வருகின்றனர். அதோடு, 'வர வர எந்தப் பிரச்சினை என்றாலும் இப்படி செல்போன் டவரில் ஏறி விடுகின்றனர்..' என ஆதங்கமும் பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications