அன்னாஹசாரே திடீர் பல்டி... விவசாயிகளுக்கு ஆதரவாக அறிவித்த உண்ணாவிரதப் போராட்டம் ரத்து
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஜனவரி 30ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாக அறிவித்த நிலையில் அதனை திரும்பப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஜனவரி 30ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாக அறிவித்த நிலையில் அந்த அறிவிப்பை ரத்து செய்துள்ளார். அவர் போராட்டத்தில் ஈடுபட மாட்டார் என்று அன்னாஹசாரே அலுவலக செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடந்த 65 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள். இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 11 கட்டப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தும் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்கள் அனைத்தும் விவசாயிகள் நலனுக்காகக் கொண்டுவரப்பட்டன என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. டிராக்டர் கவிழ்ந்து ஒரு விவசாயி மரணமடைந்தார்.
இதனிடையே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமருக்கும் அன்னா ஹசாரே ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அந்தக் கடிதத்துக்கு எந்தவிதமான பதிலும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை.
சமீபத்தில் பிரதமர் மோடிக்குத் தனிப்பட்ட முறையில் அன்னா ஹசாரே கடிதம் எழுதியிருந்தாலும், உண்ணாவிரதப் போராட்டத்தை எப்போது தொடங்குவேன் எனத் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அன்னா ஹசாரே நேற்று வெளியிட்ட அறிக்கையில், "வேளாண் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவாருங்கள் எனக் கோரிக்கை விடுத்தேன். ஆனால், மத்திய அரசு எந்தவிதமான சரியான முடிவும் எடுத்ததாகத் தெரியவில்லை.
விவசாயிகள் மீது அக்கறை இல்லாமல், மத்திய அரசு இருக்கிறது. ஆதலால், நான் ஜனவரி 30ஆம் தேதி முதல் என்னுடைய கிராமமான ராலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளேன் எனத் தெரிவித்தார். இதனையடுத்து அன்னாஹசாரே ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனார். இன்று போராட்டம் தொடங்க இருந்த நிலையில் பாஜக தலைவர் தேவேந்திர பட்நவீஸ் இன்று அன்னாஹசாரேவை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினார்.
இதனையடுத்து தனது உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பை அவர் திரும்ப பெற்றுக்கொண்டதாக அன்னாஹசரோ அலுவலகம் அறிவித்துள்ளது. தேவேந்திர பட்நவீஸ் நேரில் சந்தித்து அன்னாஹசாரேவை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தியை அடுத்து இந்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தொடர்பான அன்னா ஹசாரேவின் கோரிக்கைகள் அடுத்த 6 மாதங்களில் நிறைவேற்ற வேளாண் அமைச்சகம், நிதி ஆயோக் மற்றும் ஹசாரே பரிந்துரைத்த சில உறுப்பினர்கள் அடங்கிய குழு அடுத்த 6 மாதங்களில் ஒரு திட்டத்தை உருவாக்கும் என்று இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது இதனையடுத்து அன்னாஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.