கனமழை.. மும்பையில் 2 இடங்களில் சுவர் சரிந்து விழுந்து விபத்து.. 24 பேர் பலியான பரிதாபம்!
மும்பை: கனமழை காரணமாக மும்பையில் 2 இடங்களில் சுவர் சரிந்து விழுந்ததில் 24 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்மேற்கு பருவமழை வடமாநிலங்களில் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. டெல்லி, மகாராஷ்டிராவில் கடந்த 2 நாட்களாக தீவிரமாக மழை பெய்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 24 மணி நேரமாக அதி தீவிர கனமழை பெய்து வருகிறது.
நேற்று காலையில் இருந்து மாலை வரை மட்டும் மும்பையில் பல்வேறு இடங்களில் 120 மிமீ மழை பெய்துள்ளது. அதன்பின் இரவு நேரத்திலும் விடாமல் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
மும்பையின் தாழ்வான தெற்கு பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. முட்டி அளவிற்கு சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மும்பையில் மேலும் இரண்டு நாட்களுக்கு அதிதீவிர கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக மும்பையில் 2 இடங்களில் சுவர் சரிந்து விழுந்ததில் 24 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செம்பூர், விக்ரோளி பகுதியில் கனமழையால் சுவர் சரிந்து விழுந்ததில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. செம்பூர் பகுதியில் நிலச்சரிவு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியானார்கள்.
விக்ரோளி பகுதியில் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 14 பேர் பலியானார்கள். இரண்டு பகுதியிலும் மண் சரிவு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதியின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளார். நேற்று இரவு இந்த சம்பவங்கள் நடந்தாலும், அப்போது மழை பெய்ததாலும் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.
Saddened by the loss of lives due to wall collapses in Chembur and Vikhroli in Mumbai. In this hour of grief, my thoughts are with the bereaved families. Praying that those who are injured have a speedy recovery: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 18, 2021
இரண்டு பகுதிகளிலும் தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சம்பவ இடத்தில் இடிபாடுகளில் சிக்கி இருந்த 22 பேரின் உடல் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.
இந்த மண் சரிவில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.