மும்பையை பிரித்து மேய்ந்த மழை... தண்டவாளத்தில் தேங்கிய மழை நீர் - புறநகர் ரயில்சேவை நிறுத்தம்
மும்பை மாநகரத்தின் தெற்குப் பகுதியில் பருவமழை சூறையாடத் தொடங்கியுள்ளது. தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மும்பை: தென்மேற்குப் பருவமழை மராட்டியத்தை ஸ்பரிசிக்க ஆரம்பித்துள்ளது. மும்பை நகரத்தில் ஆரம்ப நாளிலேயே அமர்களமாக தொடங்கியுள்ளது. வெளுத்து வாங்கிய மழை மும்பை நகரத்தினை முதல் நாளிலேயே புரட்டிப்போட்டுள்ளது. தாழ்வான பல பகுதிகள் வெள்ள நீரில் மிதக்கின்றன. வாகனங்கள் நீந்திச் செல்கின்றன. தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் பல மாநிலங்களை தென்மேற்குப் பருவமழை தனது கரங்களால் அணைக்கத் தொடங்கியுள்ளது. மூன்று மாத காலம் மழையைக் கொடுக்கப் போகும் தென்மேற்குப் பருவமழை நடப்பாண்டு இயல்பான அளவில் இருக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
அந்தமானில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை கேரளா, தமிழகம் என பயணித்து தற்போது மும்பையை நனைத்துள்ளது. ஆரம்பமே அமர்களம் என்பது போல வெளுத்து வாங்கியுள்ளது மழை. கனமழையால் சாலைகளில் ஆறுகள் போல வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது.

8 செமீ பதிவு
மும்பையில் வழக்கமாக 10ஆம் தேதி பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் முன்னதாகவே மழை தொடங்கியுள்ளது. காலை 8 மணி வரைக்கும் நகரத்தின் கொலபா பகுதியில் 8 செமீ மழையும், சாந்தாகுரூர் பகுதியில் 6செமீ மழையும் பதிவாகியுள்ளது.

வாகன ஓட்டிகள் பாதிப்பு
ப்ரீச்கேண்டி மருத்துவமனைப் பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. வாகனங்கள் மிதந்து செல்கின்றன. மாதுங்கா கிங்ஸ் சர்க்கில் பகுதிகளில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு இடையே வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.

வெள்ளநீரில் மூழ்கிய தண்டவாளங்கள்
மழை ஆரம்பித்த முதல்நாளிலேயே மும்பை நகரத்தின் பல பகுதிகள் வெள்ளநீரினால் சூழப்பட்டுள்ளது. தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் பல ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. சியான் ரயில் நிலையம் ஜிடிபி ரயில் நிலையத்திற்கு இடையே தண்டவாளங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

புறநகர் ரயில்கள் நிறுத்தம்
மழை வெள்ளம் காரணமாக மும்பையில் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளநீர் வடிந்த பின்னர் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மும்பை, தானே சுற்றுவட்டாரப்பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications