முற்றியது மோதல்.. தவறானவர்களுடன் கூட்டணி வைத்துவிட்டேன்.. உத்தவ் தாக்ரே ஆவேச பேட்டி
மும்பை: மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சிகளான பாஜக மற்றும் சிவசேனா ஆகியவை நடுவே, தேர்தல் முடிவு வந்த பிறகு பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் சமபங்கு என்ற சிவசேனாவின் கோரிக்கையை பாஜக ஏற்க மறுத்ததால், இழுபறி நிலை நீடிக்கிறது.
இன்று இரவுடன் சட்டசபையின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்னாவிஸ். இதனால் அமைச்சரவை தானாக கலைந்தது.
இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், "பால்தாக்கரே பற்றி நாங்கள் எப்போதுமே தரக்குறைவாக பேசியது இல்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி பற்றி சிவசேனா தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் எப்போதுமே முதல்வர் பதவி உள்ளிட்ட அதிகார பங்கீடு தொடர்பாக தேர்தலுக்கு முன்பு பேசவில்லை" என்று தெரிவித்திருந்தார்.
இதன் பிறகு மற்றொரு இடத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களை திடீரென சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:
தேவேந்திர பட்னாவிஸ் சில நிமிடங்கள் முன்பாக அளித்த பேட்டியை பார்க்க நேரிட்டது. அதனால் நானும் சில விஷயங்களைத் தெளிவுபடுத்த செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் மகாராஷ்டிரா அரசு செய்த சாதனைகளுக்கு, தேவேந்திர பட்னாவிஸ் உரிமை கொண்டாடுகிறார். ஆனால் இந்த சாதனைகள், சிவசேனா கட்சியின் கூட்டணி ஆட்சியில் நடைபெற்றவை என்பதால் அது எங்களுக்கும் பங்கு உள்ளது.
முதல் முறையாக பால்தாக்கரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பொய் சொல்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுவும் பாஜக பக்கம் இருந்து வந்துள்ளது. கூட்டணி அமைப்பதற்காக அமித்ஷான் மும்பை வந்தார். நான் டெல்லி செல்லவில்லை. என்றாவது ஒருநாள் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவரை முதல்வராக்குவேன் என மறைந்த பால்தாக்ரேவிற்கு நான் உறுதியளித்துள்ளேன். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவேன். இதர்கு, அமித் ஷாவோ, அல்லது தேவேந்திர பட்னாவிசோ எனக்கு தேவையில்லை.
கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்ற போதே முதல்வர் உட்பட அமைச்சரவை துறைகள் தொடர்பாகவும் அமித்ஷாவிடம் தெளிவாக பேசியிருந்தேன். பொய் சொல்பவர்கள் யாரென்று இந்த நாட்டுக்கே தெரியும். பணமதிப்பிழப்பு மூலம் கருப்புப் பணத்தை ஒழித்து விடுவோம் என்று நீங்கள்தான் பொய் சொன்னீர்கள். என்னை மோடி தனது தம்பி என்றுதான் அழைப்பார். ஆனால் இப்போது ஏமாற்றிவிட்டார். நான் எப்போதுமே மோடியை தரக்குறைவாக விமர்சனம் செய்யவில்லை. இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் கூறியதுதான் போய் தகவல்.
ஒரு பக்கம் கங்கையை சுத்தம் செய்கிறார்கள், மறுபக்கம் மனசெல்லாம் அழுக்காக உள்ளது. தவறானவர்களுடன் கூட்டணி அமைத்து விட்டதை நினைத்து வருத்தப்படுகிறேன், என்று உத்தவ் தாக்ரே தெரிவித்தார். இரு கட்சி தலைவர்களில் வார்த்தை போரால், மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமையப்போவது உறுதியாகிவிட்டது போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.