தென்ஆப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்தவருக்கு ஓமிக்ரான்... இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 4
மும்பை : நவம்பர் மாத இறுதியில் தென்னாப்பிரிக்காவிலிருந்து துபாய் மற்றும் டெல்லி வழியாக மும்பைக்கு பயணம் செய்த 33 வயது நபருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூரு, குஜராத்தில் ஏற்கனவே 3 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியான நிலையில் இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஓமிக்ரான் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத், பெங்களூரு வரிசையில் தற்போது மகராஷ்டிராவிலும் ஒருவருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
ரிஸ்க் நாடுகள் என அறிவிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த போதிலும், தற்போது இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு 4ஐ தொட்டுவிட்டது.

தீவிரக் கண்காணிப்பு
தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் தொற்று இதுவரை 40 நாடுகளுக்குப் பரவி உள்ளதாகவும், மற்ற நாடுகளையும் பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொரோனா பரிசோதனைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்படுகின்றனர். ரிஸ்க் நாடுகள் எனக் கூறப்படும் தென்ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 45 நிமிடங்களில் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அவர்களுக்கு கொரோன நெகட்டிவ் என முடிவுகள் வந்த பிறகே அங்கிருந்து மாநிலத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

குஜராத், பெங்களூரு 3 பேருக்கு தொற்று
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த இருவருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 66 வயது முதியவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நவம்பர் 20ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த அவர் 7 நாட்களுக்கு பின்னர் துபாய் சென்றுள்ளார். இதை அடுத்து சமீபத்தில் ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத் திரும்பிய ஜாம்நகரைச் சேர்ந்த 72 வயது முதியவருக்கு கோவிட்-19 இருப்பது உறுதியானது. இதுமட்டுமின்றி அவருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தியாவில் 4வது ஓமிக்ரான் பாதிப்பு
இந்நிலையில் நவம்பர் மாத இறுதியில் தென்னாப்பிரிக்காவிலிருந்து துபாய் மற்றும் டெல்லி வழியாக மும்பைக்கு பயணம் செய்த 33 வயது நபருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூரு, குஜராத்தில் ஏற்கனவே 3 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதியான நிலையில் இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நவம்பர் 24ம் மும்பையில் தரையிறங்கிய அந்த நபருக்கு லேசான காய்ச்சல் இருந்துள்ளது. அவர் இதுவரை கோவிட்-19 தடுப்பூசி போடவில்லை. காய்ச்சல் காரணமாக கல்யாண்-டோம்பிவலியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

தடுப்பூசி போடத் தயாரான மக்கள்
இந்தியாவின் மக்கள்தொகையில் 18 வயதுக்குட்பட்டோரில் பாதிக்கும் மேலானோர் இரண்டு டோஸ் தடுப்பூசி இதுவரை போட்டுள்ளனர். 84 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். தற்போது ஓமிக்ரான அச்சம் காரணமாக இந்திய மக்கள் அனைவரும் தடுப்பூசி போட தயாராகி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications