பத்ம ஸ்ரீயை திருப்பி தந்துடறேன்.. ஆனால் என் கேள்விக்கு பதில் சொல்லுங்க.. கிரைம் ரேட்டை கூட்டிய கங்கனா!
மும்பை: எனது கேள்விகளுக்கு யாராவது பதில் கொடுத்தால் நான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்பதோடு எனக்கு கொடுத்த பத்மஸ்ரீ விருதையும் திரும்ப கொடுத்துவிடுகிறேன் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர். விவசாயிகளை தீவிரவாதிகள் என சிறிதும் நாகூசாமல் அழைத்தவர்.
இது போல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறி வரும் கங்கனா ரனாவத் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி
அவர் பேசுகையில் பிரிட்டிஷ் ஆட்சியில் தொடர்ச்சிதான் காங்கிரஸ் ஆட்சி. உண்மையில் இந்தியாவுக்கு 2014ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்றவுடன்தான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது. 1947 ஆம் ஆண்டு கிடைத்தது பிச்சைதான் என விஷத்தை கக்கியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் ஆத்மி, காங்கிரஸ்
இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இன்னும் சிலர் இந்தியா சுதந்திரமடைய எத்தனையோ தியாகிகள் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை சிறையில் கழித்தும் உயிர்களை நீத்தும் தியாகம் செய்துள்ளார்கள். ஆனால் அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தியது போல் கங்கனா கருத்து கூறியுள்ளது மாபெரும் குற்றமாகும்.

இந்தியாவின் உயரிய விருது
இந்திய சுதந்திரத்தை இழிவாக பேசும் அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது எதற்கு? அதை அவரிடம் இருந்து திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கைகள் எழுகின்றன. இந்த நிலையில் அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் நான் கூறிய நேர்காணலில் எல்லாவற்றையும் தெளிவாக கூறியுள்ளேன். 1857 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்காக முதல் முறையாக போராட்டம் நடந்தது.

லட்சுமி பாய்
அபபோது சுபாஷ் சந்திர போஸ், லட்சுமிபாய், வீர் சவார்கர் ஆகியோர் தியாகம் செய்தனர். 1857 ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கிளர்ச்சி போராட்டம் குறித்து எனக்கு தெரியும். ஆனால் 1947 ஆம் ஆண்டு எந்தப் போராட்டம் நடைபெற்றது? எனக்கு தெரியவில்லை. யாராவது எனக்கு சொன்னால் நான் 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் குறித்து நான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்பதோடு பத்மஸ்ரீ விருதையும் திருப்பி அளித்துவிடுகிறேன். எனக்கு யாராவது உதவி செய்யுங்கள் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்கனா கேட்டுள்ளார்.

காங்கிரஸ்
மறுபடியும் இன்றைய தினம் அவரது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸை பிச்சைக்கார கட்சி என அவர் கூறியிருந்ததை போல ஒரு புத்தகத்திலும் கூறியிருப்பதாக அந்த கருத்துகளை மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால் அது எந்த பாடப்புத்தகம் என அவர் குறிப்பிடவில்லை. அவரது போஸ்ட்டில் இந்த புத்தகத்தை பாருங்கள், காங்கிரஸை பிச்சைக்கார கட்சி என நான் மட்டும் கூறவில்லை என்கிறார். மேலும் 2019ஆம் ஆண்டு மணிகர்ணிகா: ஜான்சியின் ராணி திரைப்படத்தில் சுதந்திர போராட்ட தியாகி ராணி லட்சுமி பாயாக நடித்த நான், 1857 ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கிளர்ச்சி குறித்து நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தெரிந்து கொண்டுள்ளேன்.

காந்தியடிகள்
பகத் சிங்கை காந்தியடிகள் சாகவிட்டது ஏன், நேதாஜி போஸ் கொல்லப்பட்டது ஏன், அவருக்கு காந்தியடிகள் ஆதரவு தெரிவிக்காதது ஏன்? இந்திய பிரிவினை கோடு ஏன் வெள்ளைக்காரரால் வரையப்பட்டது? சுதந்திரத்தை கொண்டாடுவதற்கு பதில் இந்தியர்கள் ஏன் ஒருவரை ஒருவர் கொன்றனர்? வலது சாரிகள் சுதந்திரம் கிடைக்க போராட தயாராக இருந்த போது காங்கிரஸ் கட்சியின் பிச்சை பாத்திரத்தில் சுதந்திரம் கிடைத்தது ஏன்? இந்த கேள்விகளுக்கெல்லாம் எனக்கு பதில் சொல்லுங்கள் என கேட்டு அவரது கிரைம் ரேட்டை கூட்டிக் கொண்டே செல்கிறார்.












Click it and Unblock the Notifications