சீக்கியர்கள் மீதான அவதூறு கருத்து.. கங்கனா ரனாவத்திற்கு டெல்லி சட்டசபை குழு சம்மன்
மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது சமூகவலைதள பக்கத்தில் சீக்கிய மதத்தை அவதூறாக குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய பதிவுகளை போட்டதாக அவர் மீது மும்பை காவல் துறை வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்த டெல்லி சட்டசபை குழு சம்மன் அனுப்பியுள்ளது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடியபோது அவர்களை பயங்கரவாதிகள் என கங்கனா விமர்சனம் செய்திருந்தார். அது போல் இந்தியா சுதந்திரம் பெற்றதே கடந்த 2014 ஆம் ஆண்டுதான். அதற்கு முன்னர் பெற்றது வெறும் பிச்சை என கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற போவதாக கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இது குறித்தும் கங்கனா ட்வீட் போட்டிருந்தார். அதில் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்தது சோகமானது, வெட்கக்கோடானது, நியாயமற்றது. தெருவில் உள்ளவர்கள் சட்டங்களை இயற்றத் தொடங்கிவிட்டார்கள். பாராளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அல்ல, இதுவும் ஒரு ஜிகாதி தேசம்தான். இப்படி விரும்பிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.
இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கங்கனா கூறுகையில் சீக்கியர்களை காலிஸ்தான் தீவிரவாதிகள் என மறைமுகமாக விமர்சித்திருந்தார். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு, சிரோமணி அகாலி தளம் கட்சியை சேர்ந்த மன்ஜிந்தர் சிங் டிஎஸ்ஜிஎம்சி அமைப்பும் புகார் கொடுத்திருந்தது.
இதையடுத்து அவர் மீது மும்பை காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த புகாரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கு மேல் போராட்டம் நடத்தியவர்கள் காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தினர் என கங்கனா அவதூறாக பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது புகாரில் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் சீக்கியர்கள் மீது அவதூறு கூறியதாக பெறப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்த வரும் டிசம்பர் 6ஆம் தேதி ஆஜராகுமாறு டெல்லி சட்டசபை குழு சம்மன் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications