சூடு, சொரணை, சுயமரியாதை.. அமித்ஷாவுடனான சந்திப்பு குறித்து சிவசேனா சீனியர் சஞ்சய் ராவத் தந்த பதில்!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை உத்தவ் தாக்கரே சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய் ராவத் சந்தித்து பேசியதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் சஞ்சய் ராவத்தோ, அமித்ஷாவுடனான சந்திப்பை திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், சிவசேனா கட்சிக்கும் சுயமரியாதை இருக்கிறது என காட்டமாக பதிலளித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணியில் பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டு பேச்சு சுமூகமாக முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக 156 இடங்களிலும் ஷிண்டே சிவசேனா 78 இடங்களிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளன. ஏற்கனவே பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் தொகுதிப் பஙங்கீட்டுப் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் பாஜக தரப்பில் 2 தகவல்கள் பரப்பிவிடப்பட்டுள்ளன. அதில் ஒன்று, உத்தவ் தாக்கரே சிவசேனாவை சரத்பவார் கழற்றிவிடுவார்; மகள் சுப்ரியா சுலேவை முதல்வராக்க ரகசிய திட்டத்தை வைத்திருக்கிறார் சரத்பவார் என்பதாகும். மற்றொன்று, அமித்ஷாவுடன் உத்தவ் தாக்கரே சிவசேனாவின் சஞ்சய் ராவத் ரகசியமாக சந்தித்து பேசினார்; இதனால் உத்தவ் தாக்கரே மீண்டும் பாஜகவுடன் கை கோர்க்கப் போகிறார் என்பதாகும்.
இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறுகையில், இதைப் போல மோசமான அவதூறான பொய்யான தகவல் இருக்கவே முடியாது. பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனாவின் பெயரி, சின்னத்தை எங்களிடம் இருந்து பறித்து எங்கள் கட்சியை உடைத்த துரோகிகளிடம் கொடுத்த கட்சி பாஜக. அந்த கட்சியுடன் எங்களால் எப்படி கூட்டணி அமைக்க முடியும்? உத்தவ் தாக்கரே ஆட்சியையே கவிழ்த்ததும் பாஜகதான். வரலாற்றில் எதிரிகளான அவுரங்கசீப்பும் அப்சல்கானும் எப்படி ஒன்றாக சந்தித்து பேசி இருக்க முடியும்? அதுபோலவே அமித்ஷாவுடனான சந்திப்பு குறித்து பேசப்படுகிற தகவல்கள். எங்கள் சிவசேனாவுக்கும் சுயமரியாதை இருக்கிறது; மான உணர்ச்சி இருக்கிறது. நாங்கள் ஏன் அமித்ஷாவை சந்திக்க வேண்டும் என ஆவேசப்பட்டார்.












Click it and Unblock the Notifications