அனல் பறக்கும் மகாராஷ்டிரா தேர்தல் களம்.. வாழ்வா? சாவா? போராட்டத்தில் போட்டியிடும் வாரிசுகள்!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி மேலும் 14 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஷிண்டே சிவசேனா வெளியிட்ட 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் மிலிந்த் தியோரா போட்டியிடுகிறார். சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் வெளியிட்ட 3-வது வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக் மகளுக்கு எதிராக நடிகை ஸ்வரா பாஸ்கரின் கணவர் பகாத் அகமது களம் காண்கிறார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நவம்பர் 20-ந் தேதி நடைபெறுகிறது. மகாராஷ்ட்டிராவில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய நாளை கடைசிநாள். இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்தடுத்து வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன.

மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இந்த நிலையில் தற்போதுவரை மொத்தம் 99 இடங்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. நேற்று 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது.
ஆளும் மகாயுதி கூட்டணியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஒர்லி சட்டசபை தொகுதியில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனான முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரேவை எதிர்த்து மூத்த தலைவர் மிலிந்த் தியோரா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிண்டே சிவசேனா இதுவரை மொத்தம் 65 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இதேபோல சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் 3-வது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் 9 தொகுதி வேட்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர். அணுசக்தி நகர் சட்டசபை தொகுதியில் முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக் மகள் சனாவுக்கு எதிராக (அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ்) நடிகை ஸ்வரா பாஸ்கர் கணவர் பகாத் அகமது களமிறக்கப்பட்டுள்ளார்.
மராத்தா, இதர பிற்படுத்தப்பட்டோர் இடையே இடஒதுக்கீடு விவகாரத்தில் பதற்றம் நிலவும் பீட் மாவட்டத்தில் பல தொகுதிகளில் மராத்தா ஜாதியினரை சரத்பவார் தேசியவாத கட்சி வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது,
மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் களம் காணும் அரசியல் வாரிசுகள் பலரும் கடும் போட்டியை எதிர்கொண்டிருக்கின்றனர். இதனால் வாழ்வா? சாவா போராட்டமாக தேர்தல் களம் உருமாறி நிற்கிறது.












Click it and Unblock the Notifications