சூப்பரா ஜெயிக்க வையுங்க.. மாதம் ரூ.3,000 தருவோம்.. பெண்களுக்கு ஐஸ் வைத்த மகாராஷ்டிரா சிஎம் ஷிண்டே!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தால் பெண்களுக்காம மாத உதவித் தொகை ரூ.3,000 ஆக உயர்த்தப்படும் என அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வாக்குறுதி அளித்துள்ளார். மகாராஷ்டிராவில் தற்போது பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதி அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீர், ஹரியானா தேர்தல்களில் பாஜக பின்னடைவை சந்திக்கும் என கருத்து கணிப்புகள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல்களில் வென்றாக வேண்டிய முனைப்பில் இருக்கிறது பாஜக.

லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்தப் பின்னடைவுக்கான காரணங்களை ஆராய்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. வெங்காய விவசாயிகளின் கோபத்தைத் தணிக்க வெங்காய ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கி அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில் தாராஷிவ் மாவட்டத்தில் நிகழ்ச்சில் ஒன்றில் பேசிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பெண்களுக்கு உதவவே அன்பு சகோதரி- லாட்கி பகின் யோஜனா திட்டத்தை அறிவித்தோம். தற்போது பெண்களுக்கு மாதம் ரூ1,500 வழங்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக-சிவசேனா-என்சிபியை உள்ளடக்கிய மகாயுதி கூட்டணியை வெற்றி பெறச் செய்துவிட்டால் பெண்களுக்கான மாத உதவித் தொகை ரூ2,000 ஆக உயர்த்தப்படும். மகாராஷ்டிரா தேர்தலில் எங்களுக்கு பிரம்மாண்டமான வெற்றியை நீங்கள் கொடுத்தால் இந்த உதவித் தொகை ரூ3,000 ஆகவும் உயர்த்தி தருவோம். எந்த ஒரு சூழ்நிலையிலும் பெண்களுக்கான மாத உதவித் தொகை வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட மாட்டோம். நிதி நெருக்கடியால் இந்த திட்டத்தை நிறுத்திவிடுவோம் என்பது எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரம். இதனை மக்கல் நம்ப வேண்டாம். இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே சிவசேனா- சரத்பவார் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் இணைந்த மகா விகாஸ் அகாடி மீண்டும் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ3,000 வழங்குவோம் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அறிவித்திருந்தார். அதற்குப் போட்டியாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications