மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு வந்த சோதனை.. சிவசேனா செய்த அதிரடி நடவடிக்கை.. என்னாச்சு?
மும்பை: மகாராஷ்டிரா மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு எதிராக சிவசேனா உத்தவ் தாக்கரே அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஷ் அகாடி என்ற பெயரில் இரண்டு ஆண்டு ஆட்சி நடத்தின. உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார்.
இந்த கூட்டணி மீது சிவசேனாவின் 40 எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்தனர். இவர்கள் அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணி திரண்டனர். இவர்கள் மகாவிகாஷ் அகாடி கூட்டணிக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெற்றனர்.
16 சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு- அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
முதல்வரான ஏக்நாத் ஷிண்டே
இதையடுத்து உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பாஜக- அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அம்மாநில ஆளுநர் கோஷ்யாரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இருவரும் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். நேற்று முன்தினம் நடந்த பதவியேற்பு விழாவில் முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிசும் பதவியேற்றனர்.
சிவசேனாவில் இருந்து நீக்கம்
இந்நிலையில் தான் பாஜக ஆதரவுடன் மகாராஷ்டிரா புதிய முதல்வராக பதவியேற்ற ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியின் அனைத்து பதவிகளிலும் இருந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நீக்கியுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஷிண்டே நீக்கப்பட்டுள்ளதாக சிவசேனா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை பெரும்பான்மை நிரூபிக்க..
இதற்கிடையே தான் மகாராஷ்டிரா சட்டசபையில் திங்கட்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணியில் பாஜக, அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் ஈடுபட்டுள்ள நிலையில் தான் ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் நாங்கள் தான் உண்மையான சிவசேனா என ஏக்நாத் ஷிண்டே கூறிய நிலையில் தற்போதைய நடவடிக்கை என்பது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
மேலும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி சிவசேனாவின் 16 எம்எல்ஏக்களுக்கு சிவசேனா தகுதி நீக்க நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது. இதற்கு ஜூலை 11 வரை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் தான் நாளை மறுநாள் மகாராஷ்டிரா மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.