மகாராஷ்டிரா தேர்தல்: பாஜக அரசு வீசிய 'வெங்காய வலை'.. கிடுகிடு விலை உயர்வு- விவசாயிகள் ஹேப்பி!
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு அண்மையில் வெங்காய ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை அதிரடியாக நீக்கியது. இதனையடுத்து நாட்டின் மிகப் பெரிய வெங்காய சந்தையான நாசிக்கில் வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பாஜக எதிர்பார்ப்பின்படியே வெங்காய விலை உயர்வால் மகாராஷ்டிரா விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல்களைத் தொடர்ந்து மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக மிகப் பெரும் தோல்வியைத் தழுவியது.

மகாராஷ்டிராவில் பாஜக பின்னடைவை சந்திக்க, வெங்காய விவகாரம் ஒன்றாக கூறப்படுகிறது. அதாவது மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த ஆண்டு பாசுமதி அரிசி, வெங்காய ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஒரு டன் வெங்காயம் 550 அமெரிக்க டாலருக்கு குறைவாக ஏற்றுமதி செய்யக் கூடாது என்பது மத்திய அரசின் உத்தரவு. இதனால் வெங்காய விலை பெருமளவு குறைந்தது. இது வெங்காய விவசாயிகளை கடுமையாகப் பாதித்தது. மகாராஷ்டிராவின் நாக்பூரில்தான் நாட்டின் மிகப் பெரிய வெங்காய சந்தை உள்ளது. வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காத கோபத்தை லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிரா விவசாயிகள் வெளிப்படுத்த, பாஜக தோல்வியைத் தழுவியது.
தற்போது மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் வெங்காயத்தை வைத்து விவசாயிகளுக்கு மத்திய பாஜக அரசு வலை விரித்திருக்கிறது. வெங்காயம் மீதான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நீக்கவும், ஏற்றுமதி வரியை 40% முதல் 20% வரை குறைக்கவும் மத்திய பாஜக அரசு அறிவிப்பு வெளியிட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மகாராஷ்டிராவின் நாசிக் சந்தையில் எதிரொலிக்கிறது. நாசிக் லசல்காவ் வெங்காய சந்தையில் வெங்காய விலை மிகக் கடுமையாக உயர்ந்து ஒரு குவிண்டாலுக்கு ரூ.433 உயர்ந்தது. ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை ரூ.3,700 முதல் ரூ.4,951 வரை ஏலம் போனது.
அதேநேரத்தில் விவசாயிகளிடம் தற்போது வெங்காயம் கையிருப்பு குறைவாகவே இருக்கிறது. ஏற்றுமதி வரி குறைப்பு எப்போது அமலுக்கு வரும் என்பதும் தெரியாது. ஆகையால் இந்த அறிவிப்பால் மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்காது என்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.












Click it and Unblock the Notifications