மகராஷ்டிராவில் மழை வெள்ளத்தால் பேரழிவு - 40 ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் பெய்த அதிகனமழை
மகாராஷ்டிரா மாநிலம் மழை வெள்ளத்தால் சூறையாடப்பட்டுள்ளது. தொடர்மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவை சந்தித்துள்ளது அந்த மாநிலம்.
மும்பை: தென்மேற்குப் பருவமழை மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாவே தீவிரமடைந்துள்ளது. விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் மகராஷ்டிராவில் பல மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்து பேரழிவு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் மூழ்கியுள்ளதால் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை கடலோர காவல்படையினரும் பேரிடர் மீட்புப்படையினரும் மீட்டு வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் பெய்த அதிகனமழை என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
Recommended Video
கொங்கன் பிராந்தியத்தில் மீட்பு நடவடிக்கைகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ரத்னகிரி, ராய்காட், கோலாப்பூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மும்பையில் இருந்து 250 கி.மீ தொலைவில் உள்ள ரத்னகிரியில் உள்ள கடலோர நகரமான சிப்லுன் முற்றிலும் மூழ்கியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி தத்தளிப்பவர்களை கயிறுகளை கட்டி பலர் மீட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. பெண் ஒருவர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்படும் போது கடைசி நேரத்தில் மீண்டும் தண்ணீரில் விழும் காட்சிகளும் வெளியாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இயற்கை பேரிடர்
தொடர் மழை வெள்ளத்தால் ராய்காட்டில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலரைக் காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. நிலச்சரிவினால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மும்பை, தானே மற்றும் பால்கர் மற்றும் கொங்கன் பிராந்தியத்தில் உள்ள பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

போக்குவரத்து துண்டிப்பு
மும்பையின் கோவண்டி பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் இறந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். இப்பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மும்பை-கோவா நெடுஞ்சாலை போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளது.

மழை நீடிக்கும்
மகாராஷ்டிராவில் பல பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

நல்வாழ்வுக்காக பிரார்த்தனை
"மகாராஷ்டிராவில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் பேசினேன். நிலைமையை சீரமைக்க அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதி அளித்தேன். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன்," என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications