உஷாரா இருங்க! சிவசேனா சார்பில் பெரும் போராட்டத்தை நடத்தலாம்.. மகாராஷ்டிரா போலீசாருக்கு ‛அட்வைஸ்’
மும்பை: மகாராஷ்டிராவில் குழப்பமான அரசியல் சூழல் நிலவும் நிலையில் சிவசேனா கட்சியின் தொண்டர்கள் மும்பை உள்பட அனைத்து இடங்களிலும் பெரும் போராட்டத்தை நடத்தலாம் என்பதால் உஷாராக இருக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.
2024 தேர்தலுக்குப் பின் கர்நாடகா 2 ஆக, மகாராஷ்டிரா 3 ஆக உ.பி.4 ஆக பிரியும்-பாஜக அமைச்சர் உமேஷ் கட்டி
இந்த கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அமைச்சரான ஏக்நாத் ஷிண்டேவுடன் அணி திரண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளனர்.
மனம் மாறாத சிவசேனா எம்எல்ஏக்கள்
ஆளும் கூட்டணிக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டேவுடன் உள்ள சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த சுயேச்சைகள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இதனால் ஆளும் கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பை திரும்ப வேண்டும். உத்தவ் தாக்கரேவிடம் கோரிக்கை வைத்தால் ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறவும் தயாராக இருப்பதாக சிவசேனாவின் மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத் கூறினார். இதிலும் அதிருப்தி எம்எல்ஏக்கள் மனம் மாறவில்லை.
Recommended Video
அதிருப்தியில் உத்தவ் தாக்கரே
இதற்கிடையே தங்களது அணியே உண்மையான சிவசேனா என கூறி ஷிண்டே, 37 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதத்தை துணை சபாநாயகர் ஜிர்வால், கவர்னர் பகத்சிங் கோஷியாரி மற்றும் சட்டசபை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் உத்தவ் தாக்கரே அதிருப்தியில் உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனையில், ‛‛சிவசேனா கட்சியை சிலர் உடைக்க விரும்புகின்றனர். இதை எதிர்த்து போராடும் தைரியம் என்னிடம் உள்ளது. ஏக்நாத் ஷிண்டேவுக்காக அனைத்து விஷயங்களையும் செய்தேன். அவரது மகன் எம்பியாக உள்ளார். ஆனால், எனது மகனை பற்றிய விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன'' என கூறினார்.
மை தெளிப்பு
இந்நிலையில் மகாராஷ்டிராவின் பல இடங்களில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நிலைப்பாட்டை சிவசேனா கட்சியினர் எடுத்துள்ளனர். அவரது புகைப்படம், பேனர் மீது மை தெளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இன்னொரு அதிருப்தி எம்எல்ஏ திலீப்பின் போஸ்டர் மீதும் மை தெளிக்கப்பட்டது. மேலும் சில இடங்களில் சிவசேனா தொண்டர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். இதனால் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.
உஷார் நிலையில் போலீஸ்
மேலும் மாநிலத்தில் மும்பை உள்பட அனைத்து இடங்களிலும் சிவசேனா தொண்டர்கள் சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் மராட்டியத்தின் மும்பை நகர் உள்பட அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.