மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் பட்னாவிஸ்.. பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் மாநிலத்தின் அடுத்த முதல்வர் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தேவேந்திர பட்னாவிஸ் தனது வீட்டில் பாஜக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
மகாராஷ்டிராவில் 2019 சட்டசபை தேர்தலில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வர் ஆனார்.
தமிழகத்தை சில்லென மாற்றும் வானிலை! அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்காம்.. சென்னை வானிலை மையம்
105 எம்எல்ஏக்களுடன் தனிப்பெரும் கட்சியாக பாஜக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்தது. இதையடுத்து அவ்வப்போது பாஜக-சிவசேனா இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. சமீபகாலமாக இது அதிகரித்தது.
ஏக்நாத் ஷிண்டேவுடன் 46 எம்எல்ஏக்கள்
இந்நிலையில் தான் மகாராஷ்டிராவை ஆளும் கூட்டணியில் சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுடன் மகாராஷ்டிராவில் இருந்து கிளம்பி அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர். ஏக்நாத் ஷிண்டேவுக்கு சிவசேனாவின் 40 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. மேலும் சுயேச்சைகளும் அவருடன் கைகோர்த்து உள்ளனர். மொத்தம் 46 எம்எல்ஏக்கள் வரை ஏக்நாத் ஷிண்டேவுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மகாராஷ்டிரா அரசு கவிழும் நிலையில் உள்ளது.
உத்தவ் தாக்கரே பேச்சுக்கு பலனில்லை.
இந்நிலையில் தான் முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று தனது அரசு இல்லத்தை காலி செய்தார். மேலும், அவர் கூறுகையில், ‛‛முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். கடிதம் தயாராக உள்ளது. குறைகளை தன்னிடம் வந்து கூற வேண்டும். யார் வேண்டுமானாலும் முதல்வர் பதவியில் அமரலாம்'' என உருக்கமாக கூறினார். இருப்பினும் தற்போது வரை ஏக்நாத் ஷிண்டே கேம்ப்பில் இருந்து எம்எல்ஏக்கள் திரும்பி வரவில்லை இதனால் உத்தவ் தாக்கரேவின் 55 எம்எல்ஏக்களில் 13 பேர் மட்டுமே அவருடன் உள்ளனர். மீதமுள்ள 42 எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவின் பக்கம் உள்ளனர்.
பட்னாவிசுக்கு ஆதரவாக போஸ்டர்
இதற்கிடையே தான் அவுரங்காபாத்தின் பல இடங்களில் பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், பட்னாவிஸ் தான் அடுத்த முதல்வர், Fadnavis For CM என ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் எழுதப்பட்டுள்ளது. தற்போது இந்த படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. இதை பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமையலாம் என கருத்து தெரிவித்து உள்ளனர்.
பாஜக தீவிர ஆலோசனை
இதற்கிடையே தான் பாஜகவின் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் இன்று தனது வீட்டில் எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது மாநிலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்தால் அதனை முறையாக பயன்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சி சாத்தியமா?
மகாராஷ்டிராவில் பாஜகவுகக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆட்சி அமைக்க மொத்தம் 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இதனால் தற்போது சிவசேனாவில் அதிருப்தியில் உள்ள எம்எல்ஏக்கள் ஆதரவு வழங்கினால் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகும். அதேநேரத்தில் சிவசேனா தரப்பில் அந்த எம்எல்ஏக்களுக்கு எதிராக கட்சி தாவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது.