மும்பை அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: கடைசி நேர ட்விஸ்ட்! உத்தவ் அணிக்கு வெற்றி கன்பார்ம்
மும்பை: மகாராஷ்டிராவில் மும்பை அந்தேரி கிழக்கு தொகுதிக்கு நவம்பர் 3-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடைசி நேரத்தில் பாஜக தனது வேட்பாளரை வாபஸ் செய்ததால் உத்தவ் தாக்கரே அணி வெற்றி பெற உள்ளது.
மகராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியாகவும் கட்சி இரண்டாக பிளவு பட்டுள்ளது.
இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியும் மகாராஷ்டிராவில் கவிழ்ந்தது.

அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
இதையடுத்து, பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி வகித்து வருகிறார். இரு அணிகளும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று கூறி வரும் நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே அணி போட்டியிடவில்லை. பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறிவிட்டது. எதிர்முனையில் உத்தவ் தாக்கரே அணி வேட்பாளரை நிறுத்தியது.

வேட்பாளராக ருதுஜா லட்கே மனைவி
அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த சிவசேனா எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் உயிரிழந்தார். இதன் காரனமாகே இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 3-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கேவை உத்தவ் தாக்கரே அணி வேட்பாளராக நிறுத்தியது. ஏக்நாத் ஷிண்டே அணி ஆதரவுடன் பாஜக வேட்பாளராக முர்ஜி பட்டேல் நிறுத்தப்பட்டார்.

புதிய சின்னம்
சிவசேனா இரு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல் உத்தவ் தாக்கரேவுக்கு ஆசிட் டெஸ்ட் ஆக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. பாஜகவும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தங்கள் செல்வாக்கை மக்கள் மத்தியில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துடன் களம் இறங்கியிருந்தது. இதற்கிடையில், சிவசேனாவின் கட்சியை முடக்கிய தேர்தல் ஆணையம் இரு அணிகளுக்கும் புதிய சின்னத்தை ஒதுக்கியது.

பாஜக போட்டியில் இருந்து விலக கோரிக்கை
இப்படி தினம் தினம் பரபரப்பு திருப்பங்கள் மகாரராஷ்டிர அரசியல் களத்தில் அரங்கேறி வந்த நிலையில், உத்தவ் தாக்கரே அணி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கைகள் எழுந்து வந்தன. நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாஜகவும் போட்டியில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுவடைந்தன. குறிப்பாக மகாரஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே, இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

அஞ்சலி செலுத்தும் விதமாக
இது தொடர்பாக மகாராஷ்டிர துணை முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிசுக்கு ராஜ் தாக்கரே கடிதம் எழுதினார். அதில், மறைந்த எம்.எல்.ஏ ரமேஷ் லட்கேவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த தேர்தலில் நவநிர்மாண் சேனா போட்டியிடவில்லை. எனவே பாஜகவும் போட்டியிட வேண்டாம் என்று கோரியிருந்தார். அதேபோல், ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ பிரதாப் சர்னாயக்கும் பாஜக இந்த தேர்தலில் வேட்பாளரை நிறுத்தக் கூடாது என்று கோரிக்கை விடுத்து இருந்தார். இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.

உத்தவ் தாக்கரே அணி வாகை சூடும்
இந்த நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை பாஜக திரும்பப் பெற்றுள்ளது. ருதுஜா லட்கே வெற்றிக்கு உதவும் வகையில் நல்லெண்ண அடிப்படையில் வேட்பாளர் திரும்ப பெறப்பட்டுள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முர்ஜி படேல் தனது வேட்பு மனுவை திரும்ப பெற உள்ளார். மகாராஷ்டிராவில் மட்டும் அன்றி நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை திரும்ப பெற்றதன் மூலம் உத்தவ் தாக்கரே அணி எளிதில் வெற்றி வாகை சூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications