ஷாக்..! மும்பை மருத்துவருக்கு 13 மாதங்களில் 3 முறை கொரோனா.. வேக்சின் போட்ட பிறகு இரு முறை பாதிப்பு
மும்பை: மகாராஷ்டிராவைச் சேர்ந்த 26 வயது மருத்துவர் ஒருவருக்குக் கடந்த 13 மாதங்களில் மூன்று முறை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இரண்டு முறை அவர் வேக்சின் போட்ட பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா 2ஆம் அலையின் மோசமான பாதிப்பு இப்போது தான் மெல்லக் குறைந்துள்ளது. இதனால் வேக்சின் பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அதேநேரம் கொரோனா வேக்சின் போட்டவர்களுக்கு மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விவும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
மும்பை மருத்துவர்
மும்பையில் வசித்து வரும் 26 வயதான மருத்துவர் ஸ்ரிஷ்டி ஹல்லாரி. இவர் அங்குள்ள வீர் சர்வாக்கர் மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் இவருக்கும், இவரது தாய், தந்தை மற்றும் சகோதரருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு
ஆனால், மருத்துவர் ஸ்ரிஷ்டி ஹல்லாரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது இது முதல் முறை இல்லை. ஸ்ரிஷ்டி ஹல்லாரிக்கு முதலில் கடந்த ஆண்டு ஜூன் 17ஆம் தேதி வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 8ஆம் தேதி அவர் கோவிஷீல்டு முதல் டோஸை போட்டுக் கொண்டார்.
வேக்சின் போட்ட பிறகும் பாதிப்பு
இந்தச் சூழலில் கடந்த மே 29ஆம் தேதி ஸ்ரிஷ்டி ஹல்லாரிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது லேசான வைரஸ் பாதிப்பு மட்டுமே ஏற்பட்டதால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். இந்தச்சூழலில் மீண்டும் மூன்றாவது முறையாக ஸ்ரிஷ்டி ஹல்லாரிக்கு கடந்த ஜூலை 11ஆம் தேதி வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறை அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இணை நோய்
இது குறித்து டாக்டர் ஸ்ரிஷ்டி ஹல்லாரி கூறுகையில், "மூன்றாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறை குடும்பத்தில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் வேக்சின் 2 டோஸை எடுத்துக் கொண்டவர்கள் தான். எனது தாய்க்கும் சகோதரருக்கும் சர்க்கரை உள்ளது. அதேபோல எனது தந்தைக்கும் இணை நோய் உள்ளது. இதனால் ரெம்டெசிவிர் கொண்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது" என்றார்.
கொரோனா வேக்சின்
இருப்பினும், தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகும் வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், வேக்சின் எடுத்துக் கொண்டால் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவது குறையும் என்றும் இதன் மூலம் உயிரிழப்புகளைக் குறைக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.