நாட்டிலேயே அதிக விலைக்கு விற்பனையான அடுக்குமாடி குடியிருப்பு.. எவ்வளவுனு தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க
மும்பையில் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீடு ஒன்று ரூபாய் 240 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
மும்பை: நாட்டின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பையில் உள்ள வோர்லி பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் விலை ரூ.240 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக தொகைக்கு விற்பனையான அடுக்கு மாடி வீடு இதுதானாம்.
நாடு முழுவதும் தற்போது பிழப்பு தேடி பெரு நகரங்களை மக்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருவது அதிகரித்துள்ளது. இதனால் நகரங்களில் மக்கள் வசிப்பதற்கு போதிய இடமும் கிடைப்பதில்லை.
விலை அதிகரிப்பு ஒரு பக்கம் என்றால் வீடுகள் கட்டுவதற்கு இடம் கூட இல்லாத அளவுக்கு மக்கள் தொகை அடர்த்தி அதிகரித்துள்ளது. இதனால், நகரங்களில் திரும்பும் இடம் எல்லாம் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள்
தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தால் போல வானுயர்ந்து நிமிர்ந்து நிற்கும் இந்த கட்டிடங்கள்தான் சென்னை, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் தற்போது அதிக அளவில் கட்டப்படுவதை காண முடியும். இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட அவ்வளவு எளிதாக வீடுகளை வாங்கி விட முடியாது. அதுவும் பல லட்சங்களில் இருந்து கோடிகளுக்கே விற்பனையாவது பலருக்கும் தெரியும். நாட்டின் நிதி தலைநகரம் என்று சொல்லப்படும் மும்பையில் சொல்லவே வேண்டாம்.

ரூ. 240 கோடிக்கு விற்பனை
மிகவும் காஸ்ட்லியான நகரமான மும்பையில் அடுக்கு மாடி குடியிருப்பின் விலையை சொல்லவா வேண்டும்.. எப்படியும் பல கோடிகளை சாதாரணமாக தாண்டி விடும் என்பது தெரிந்த விஷயம்தான். தற்போது மும்பையில் அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை ஒன்று ரூபாய் 240 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. நாட்டிலேயே அதிக விலைக்கு விற்பனையான அடுக்குமாடி வீடு இதுவேயாகும். 'த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட்' என்று அழைக்கப்படும் அடுக்கு மாடி குடியிருப்பில் 'பென்ட்ஹவுஸ்' என்றுஅழைக்கப்படும் உச்சிப் பகுதி குடியிருப்பு உள்ளது.

பி.கே. கோயங்கா
63, 64, 65 ஆகிய தளங்களில் அமைந்துள்ள இந்த பென்ட்ஹவுஸ் குடியிருப்புதான் ரூ.240 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. வெல்ஸ்பன் குழுமத்தின் தலைவர் பி.கே. கோயங்கா என்பவர்தான் ரூ. 240 கோடிக்கு இந்த வீட்டை வாங்கியிருக்கிறார். இந்த ஆடம்பர வீடு ஒர்லி அன்னி பெசன்ட் ரோட்டில் உள்ளது. மொத்தம் 66 மாடிகள் அடங்கிய இந்த அடுக்குமாடி குடியிருப்பு இரட்டை கோபுரங்கள் உள்ளன. இதில் உள்ள டவர் பி குடியிருப்பில் தான் அதிக விலைக்கு வீடு விற்பனையாகியுள்ளது.

கடற்கரையை பார்க்கும் வசதியில்
ரூ.240 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு விற்பனை ஆனது குறித்து கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் பூங்கஜ் கபூர் என்பவர் கூறும் போது, "நாட்டிலேயே இதுவரை அதிக விலைக்கு விற்பனையான அடுக்குமாடி வீடு இது தான். வரும்காலங்களில் இதைவிட அதிக விலைக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் விற்பனை ஆகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது" என்றார். 30 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த அடுக்குமாடி வீடு கடற்கரையை பார்க்கும் வசதியில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.

வீடுகள் கிடைப்பது கடும் சவால்
எனவே இந்த அடுக்குமாடியின் வீட்டின் விலை அதிகமாக இருக்கலாம் என்று தெரிகிறது. நகர்புறங்களை நோக்கிய மக்களின் வருகை அதிகரிப்பு.. நகரங்களில் போதிய இட வசதியின்மை போன்றவற்றால் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனாலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட உடனே முன்பதிவு முடிந்து அங்கும் கூட வீடுகள் கிடைப்பது கடும் சவால் மிக்கது என்றுகூட அத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications