'நோ ஃபோட்டோ.. நோ டிரோன்..' ஆர்எஸ்எஸ் தலைமையிடத்தை சுற்றி கடும் கட்டுப்பாடுகள்.. திடீர் உத்தரவு ஏன்
மும்பை: மகாராஷ்டிர தலைநகர் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையிடத்திற்கு அருகே பல புதிய கட்டுப்பாடுகளை நாக்பூர் போலீசார் விதித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகளில் முதன்மையானது ஆர்எஸ்எஸ். இந்த அமைப்பின் தலைமையிடம் மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் அமைந்துள்ளது.
வழக்கமாக ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெறும் அனைத்து முக்கிய கூட்டங்களும் இங்கு தான் நடைபெறும். நாடு முழுவதும் உள்ள ஆர்எஸ்எஸ் முக்கிய தலைவர்களும் அவ்வப்போது இங்கு ஆலோசனை நடத்துவது வழக்கம்.

முக்கிய உத்தரவு
இந்நிலையில், சமீப காலமாக ஆர்எஸ்எஸ் தலைமையிடத்திற்கு பல்வேறு பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து அச்சுறுதல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் சார்பில் போலீசாரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து பயங்கரவாத அச்சுறுத்தல்களை ஆய்வு செய்த நாக்பூர் போலீசார், பல முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.மேலும், நாக்பூர் நகரில் சில பகுதிகளில் போலீசாரின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு
இது தொடர்பாக நாக்பூர் காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமார் கூறுகையில், "ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகள் 2-3 மாதங்களுக்கு முன்பு நாக்பூரில் சிறு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாக்பூர் நகரம் முழுவதும் பதற்றமான இடங்களில் போலீஸாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது .

டிரோன் தடை
மேலும் நகரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தைச் சுற்றி புகைப்படம் எடுப்பது மற்றும் டிரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார். அதாவது இனி ஆர்எஸ்எஸ் தலைமையிடத்தைச் சுற்றி 2 கிமீ தூரத்திற்கு டிரோன்களை பறக்கவிடக்கூடாது. அப்படிப் பறக்கும் டிரோன்களை போலீசார் கைப்பற்றுவார்கள். மேலும், சம்பந்தப்பட்ட நபர் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

ஆர்எஸ்எஸ் தலைமையிடம்
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமை அலுவலகமான டாக்டர் ஹெட்கேவார் பவன், நாக்பூரின் மஹால் பகுதியில் உள்ள சங்க கட்டிடச் சாலையில் அமைந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே, ஆர்எஸ்எஸ் தலைமையகம், நாக்பூர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச ஏர்போர்ட் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக டிரோன் இயக்க தடை விதிக்கப்படும் என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

என்ன காரணம்
நாடு முழுவதும் முக்கிய இடங்களில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தேவையான பாதுகாப்பு முன்னெச்சிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அனைத்து மாநிலங்களுக்கும் சமீபத்தில் தான் உள் துறை அமைச்சரகம் அறிவுறுத்தியிருந்தது. இது வெளியாகி சில நாட்களிலேயே நாக்பூர் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications