தனது முதல் விமான சேவையை தொடங்கிய நவி மும்பை சர்வதேச விமான நிலையம்!
மும்பை: நவி மும்பை சர்வதேச விமான நிலையம் (NMIA) புதன்கிழமை தனது முதல் திட்டமிடப்பட்ட பயணிகள் சேவைகளைத் தொடங்கியது. இந்திய சிவில் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பில் முக்கிய மைல்கல்லாக இது அமைந்துள்ளது.
பெங்களூருவில் இருந்து வந்த இண்டிகோ 6E460 விமானம் காலை 08:00 மணிக்கு நவி மும்பை ஏர்போர்ட்டில் தரையிறங்கியது. அதற்குப் பாரம்பரிய வாட்டர் கேனான் சல்யூட் மரியாதை அளிக்கப்பட்டது. நவி மும்பையில் முதல்முறையாக இந்தப் பயணிகள் விமானம் தரையிறங்கிய நிலையில், அங்குத் திட்டமிடப்பட்ட பயணிகள் சேவை தொடங்கிவிட்டதை இது குறிக்கிறது.

தொடர்ந்து அதே இண்டிகோ விமானம் 6E882, காலை 08:40 மணிக்கு ஹைதராபாத் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. இதன் மூலம் முதல் வருகை மற்றும் புறப்பாடு சுழற்சியை மும்பை ஏர்போர்ட் நிறைவு செய்தது. நவி மும்பையில் விமானச் சேவை ஆரம்பிக்கப்பட்டது, மும்பை பெருநகரப் பகுதிக்கான (MMR) விமான இணைப்பை வலுப்படுத்தும் முக்கியமான படியாகும். நவி மும்பை ஏர்போர்ட் முழுமையாகச் செயல்படத் தொடங்கியதும், இது தற்போதுள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் நிலவும் நெரிசலைக் கணிசமாகக் குறைக்கும். மேலும், நவி மும்பையில் அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் சரக்குத் தேவைகளையும் இது பூர்த்தி செய்யும்.
கிரீன்ஃபீல்ட் விமான நிலையமாக உருவாக்கப்பட்ட நவி மும்பை ஏர்போர்ட், பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா மற்றும் பிராந்திய வளர்ச்சியை ஆதரிக்கும். புதிய ஏர்போர்ட்களில் சர்வீஸ் தொடங்குவது, அதிகரித்து வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணத் தேவைக்கு ஏற்ப இந்தியா அதன் விமான அமைப்பை விரிவுபடுத்துகிறது என்பதைக் காட்டுகிறது.
தனது முதல் சர்வீஸ் வெற்றிகரமாகக் கையாண்டதன் மூலம், நவி மும்பை சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் விமானப் போக்குவரத்து வரைபடத்தில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளதைக் காட்டுகிறது.. இது மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விமானப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைப்பதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications