மும்பையில் மீண்டும் பரபரப்பு.. முகேஷ் அம்பானி வீடு குறித்து விசாரித்த 2 பேர்.. தீவிர பாதுகாப்பு!
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அல்டாமவுன்ட் ரோட்டில் ரிலையன்ஸ் குழும தலைவரான பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் அன்டிலா எனப்படும் சொகுசு பங்களா வீடு அமைந்துள்ளது. மொத்தம் 27 மாடிகளை கொண்ட இந்த பங்களாவில் அனைத்து வசதிகளும் உள்ளன.
இந்த நிலையில் மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொலைபேசியில் தொடர்புகொண்ட கால் டாக்சி டிரைவர் ஒருவர், மர்ம நபர்கள் இரண்டு பேர் முகேஷ் அம்பானியின் வீடு குறித்து விசாரித்ததாகவும், அந்த நபர்கள் மர்ம பை ஒன்றை வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.

மர்ம நபர்கள்
ஆசாத் மைதானம் அருகேயுள்ள கில்லா நீதிமன்றத்தின் வாயிலில் மஞ்சள் நிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட மாருதி காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தபடி இருவர் முகேஷ் அம்பானியின் வீடு குறித்து விசாரித்ததாக டாக்சி டிரைவர் தகவல் அளித்துள்ளார்.'விலாசம் கேட்ட இருவரின் கையிலும் பெரிய பை இருந்தது,

டாக்சி டிரைவர் தகவல்
அதன் பிறகு டாக்சி டிரைவர் உடனடியாக இது குறித்து மும்பை காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்' என்று போலீசார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இருவரும் குர்தா, பைஜாமா அணிந்திருந்ததாகவும், இந்தி மற்றும் உருதுவில் பேசியதாகவும் கால்டாக்சி டிரைவர் போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார். ஓட்டுநரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், மூத்த அதிகாரி ஒருவர் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
இதனை தொடர்ந்து முகேஷ் அம்பானியின் வீடு முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் அந்த பகுதியை சுற்றி போலீசார் ரோந்து வருகின்றனர். கட்டிடத்தைச் சுற்றியுள்ள சி.சி.டி.வி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

வெடிபொருட்கள் நிரம்பிய கார்
முகேஷ் அம்பானியின் வீட்டருகே சில மாதங்களுக்கு முன்னர், வெடிபொருட்கள் நிரம்பிய கார் கண்டுபிடிக்கப்பட்டது. 20 ஜெலட்டின் குச்சிகளும், முகேஷ் மற்றும் நீதா அம்பானிக்கு எழுதப்பட்ட கடிதமும் அந்த காரில் இருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை, மும்பை போலீஸ் அதிகாரி சச்சின் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications