எம்.பி.க்களும் எஸ்கேப்பாகும் அச்சம்..ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் திரெளபதி முர்முவுக்கு சிவசேனா ஆதரவு
மும்பை: சிவசேனாவின் எம்.எல்.ஏக்களைப் போல எம்.பி.க்களும் மகாரஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கோஷ்டிக்கு தாவிவிடாமல் தடுக்க, ஜனாதிபதித் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்வை ஆதரிப்பது என அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தும் உறுதி செய்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணியின் திரெளபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா களத்தில் உள்ளனர். தற்போதைய நிலையில் திரெளபதி முர்மு வெல்லவே வாய்ப்புகள் அதிகம்.

பதவியை பறிகொடுத்த உத்தவ்
இதனிடையே ஜனாதிபதி தேர்தலை முன்வைத்து சிவசேனாவில் மற்றொரு கலகம் அரங்கேறக் கூடும் என கூறப்பட்டு வந்தது. சிவசேனாவின் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள், ஏக்நாத் ஷிண்டேவை ஆதரித்ததால் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. உத்தவ் தாக்கரே, முதல்வர் பதவியையும் இழந்தார். இதனால் அதிருப்தி கோஷ்டியின் ஏக்நாத் ஷிண்டே, பாஜக ஆதரவுடன் முதல்வரானார்.

எம்.பி.க்கள் போர்க்கொடி
எம்.எல்.ஏக்களைத் தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் ஏக்நாத் ஷிண்டேவை ஆதரித்தனர். மேலும் சிவசேனாவின் மொத்தம் 18 எம்.பிக்களில் 12 பேர், ஏக்நாத் ஷிண்டே கோஷ்டிக்கு தாவக் கூடும் எனவும் கூறப்பட்டது. இதனால் உத்தவ் தாக்கரே தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்தது. அத்துடன், 12 எம்.பி.க்களும் ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் திரெளபதி முர்முவைத்தான் ஆதரிக்க வேண்டும் என கட்சித் தலைமைக்கும் கடிதம் அனுப்பினர்.

கிரீன் சிக்னல்
ஏற்கனவே கட்சி, சின்னம், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என அத்தனையையும் பறிகொடுத்த உத்தவ் தாக்கரேவுக்கு இதுமிகப் பெரிய நெருக்கடியானது. இது தொடர்பாக கட்சித் தலைவர்கள், எம்.பி.க்களுடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில், திரெளபதி முர்முவையே எம்.பி.க்கள் ஆதரிக்கலாம் என கிரீன் சிக்னல் காட்டினாராம் உத்தவ் தாக்கரே.

திரெளபதி முர்முவுக்கு ஆதரவு?
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், திரெளபதி முர்முவை ஆதரிப்பது தொடர்பாக நாங்கள் ஆலோசனை நடத்தினோம். திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிப்பதாலேயே பாஜகவை ஆதரிக்கிறோம் என்பது அர்த்தமும் அல்ல. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு 48 மணிநேரத்தில் உத்தவ் தாக்கரேவால் அறிவிக்கப்படும். தேசிய அளவிலும் மாநிலத்திலும் நாங்கள் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாகவே இருக்கிறோம். யஷ்வந்த் சின்ஹாவும் நல்ல வேட்பாளர்தான். இதற்கு முன்னர் பிரதீபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி ஆகியோரையும் ஜனாதிபதி தேர்தலிலும் ஆதரித்தோம். ஆகையால் எங்கள் நிலைப்பாட்டை பொறுத்திருந்து பார்க்கவும் என்றார்.












Click it and Unblock the Notifications