ரூ.350 லஞ்சம்..ஓராண்டு சிறை.. 24 ஆண்டுக்கு பிறகு சப் இன்ஸ்பெக்டரை விடுவித்த பாம்பே ஹைகோர்ட்
ரூ.350 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஆதாரம் இல்லாததால் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை 24 ஆண்டுகளுக்கு பிறகு உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளது.
மும்பை: லஞ்ச வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை 24 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்துள்ளது மும்பை நீதிமன்றம். அவர் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் இல்லாத காரணத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கோடி கோடியாக லஞ்சம் வாங்கி வாழ்க்கை நடத்துகிறார்கள். சாதாரண அலுவலகம் தொடங்கி மிகப்பெரிய அரசு அலுவலகம் வரை லஞ்சம் தலை விரித்தாடுகிறது. லட்சக்கணக்கில் லஞ்சம் பெறுபவர்கள் எப்படியோ தப்பித்துக்கொள்கிறார்கள். சில 100 ரூபாய் லஞ்சம் பெறுபவர்கள் வசமாக சிக்கி தண்டனை பெறுகின்றனர்.

லஞ்சம் பெற்றதாக கூறி முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு தண்டனை அளித்தது நீதிமன்றம், அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் அந்த சப் இன்ஸ் பெக்டர். அவர் பக்கம் நியாயம் இருக்கவே 24 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.
போராடி நியாயம் பெற்ற அந்த சப் இன்ஸ்பெக்டர் பெயர் தாமு அவ்ஹாத் என்பதாகும். நாசிக் மாவட்டம் ஏவ்லா தாலுகா காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 1988ஆம் ஆண்டு வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு ஜாமீன் ஏற்பாடு செய்வதாக கூறி 350 ரூபாயை லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் விசாரணை நிறைவடைந்து அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். பாம்பே ஹைகோர்ட்டில் நீதிபதி பிஷட் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. வழக்கின் விசாரணையின் போது அரசு தரப்பில், சப் இன்ஸ்பெக்டர் தாமு அவ்ஹத் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் நிரூபிக்கப்படவில்லை.
இதனால் 24 ஆண்டாக கிடப்பில் கிடந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ்காரர் தாமு அவ்ஹத்தை விடுதலை செய்து நீதிபதி உத்தவிட்டார். மேலும் நீதிபதி தனது உத்தரவில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து லஞ்சபணத்தை மீட்டு எடுப்பது மட்டும் போதாது. குற்றத்தை உறுதிப்படுத்த போதிய ஆதாரம் வேண்டும். இந்த ஆதாரம் இல்லாததால் வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக தெரிவித்தார்.
24 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் தாமு அவ்ஹத். தாமதமான நீதிதான் என்றாலும் மன நிறைவோடு தான் குற்றமற்றவர் என்ற நிம்மதியோடு அந்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளார் சப் இன்ஸ்பெக்டர் தாமு.












Click it and Unblock the Notifications