சச்சினின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. லீவ் எடுத்து ஊருக்கு சென்றவர் விபரீத முடிவு!
மும்பை: சச்சின் டெண்டுல்கரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மாநில ரிசர்வ் போலீஸ் படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாகப் போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இன்றளவும் கிரிக்கெட் உலகின் ஏராளமான சாதனை மகுடங்களுக்கு உரியவராக இருந்து வருகிறார் சச்சின் டெண்டுல்கர். சச்சின் தனது ஓய்வுக்குப் பிறகு ராஜ்யசபா எம்.பியாகவும் பணியாற்றினார். நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் பெற்றுள்ளார் சச்சின்.

சச்சின் டெண்டுல்கரின் பாதுகாப்புப் பணியில் மாநில ரிசர்வ் போலீஸ் படை வீரராக (எஸ்ஆர்பிஎஃப்) 39 வயதான ஜவான் பிரகாஷ் கப்டேவும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சில நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம் ஜாம்நர் நகருக்குச் சென்றுள்ளார் ஜவான் பிரகாஷ் கப்டே.
தனது சொந்த ஊரில் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார் எஸ்ஆர்பிஎஃப் வீரர் ஜவான் பிரகாஷ் கப்டே. தனக்கு வழங்கப்பட்டு இருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே, இன்று அதிகாலை கழுத்தில் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட ஜவான் பிரகாஷ் கப்டேவுக்கு வயதான பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தனிப்பட்ட காரணங்களுக்காக ஜவான் பிரகாஷ் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விசாரணை முடிவிலேயே இது குறித்து உறுதியாக தெரிவிக்க முடியும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தற்கொலை தொடர்பாக எஸ்.ஆர்.பி.எஃப்பும் விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications