"என் தாத்தாவை எப்படிங்க தப்பா பேசலாம்".. ராகுலை சும்மா விட மாட்டோம்.. கொதித்தெழுந்த சாவர்க்கர் பேரன்
மும்பை: ஆர்எஸ்எஸ் நிறுவனர்களில் ஒருவரான சாவர்க்கர் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தரக்குறைவாக பேசியதாக அவரது பேரன் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தனது தாத்தாவை தொடர்ந்து இழிவுப்படுத்தி வருவதற்காக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப் போவதாகவும் சாவர்க்கரின் பேரன் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பிர்ஸா முண்டாவையும், சாவர்க்கரையும் ஒப்பிட்டு ராகுல் காந்தி அண்மையில் சில கருத்துகளை தெரிவித்தது சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்தியாவை தாய்நாடாக பார்க்கும் அனைவரும் இந்துக்கள் தான்.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு
சாவர்க்கர் அரசியல்..
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது முதலாக, சில இந்துத்துவா தலைவர்களை மக்களின் ஆதர்ச நாயர்களாக அடையாளப்படுத்த அக்கட்சியினர் முற்பட்டு வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் விநாயக் தாமோதர் சாவர்க்கர். சுதந்திரப் போராட்டத்தில் இவரது பங்கு அளப்பரியது என பாஜக கூறி வந்தது. ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மன்னிப்புக் கடிதங்களை எழுதி விடுதலையானவர்தான் சாவர்க்கர் என எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் விமர்சித்தன. எனினும், சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட தியாகியாக பாஜக தொடர்ந்து அடையாளப்படுத்தி வருகிறது. அதே அளவுக்கு, சாவரர்க்கரை எதிர்க்கட்சிகளும், பொதுமக்களில் ஒருதரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ராகுல் விமர்சனம்..
சாவர்க்கரை கடுமையாக விமர்சித்து வரும் அரசியல் கட்சித் தலைவர்களில் ராகுல் காந்தி முக்கியமானவர். அந்த வகையில், மகாராஷ்டிராவில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி நேற்று முன்தினம் பழங்குடியினர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், "பழங்குடியினர் சமூகத்தின் நாயகன் பிர்ஸா முண்டா ஒரு மாவீரர். பிரிட்டிஷ் ஏகாதிபயத்திற்கு எதிராக தனது 24 வயதிலேயே கிளர்ந்தெழுந்தவர் அவர். சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் அளித்த பங்களிப்பு அளப்பரியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாமல் அவர்களுக்கு எதிராக சண்டையிட்டு உயிர் துறந்தவர் பிர்ஸா முண்டா.
"சாவர்க்கர் வீரரா?"
ஆனால், மிர்ஸா முண்டாவையும், அவரது சித்தாந்தத்தையும் பாஜக தொடர்ந்து சிறுமைப்படுத்தி வருகிறது. மாவீரரான மிர்ஸா முண்டாவை இழிவுப்படுத்தும் பாஜகவினர் யாரை தூக்கி நிறுத்துகிறார்கள் எனத் தெரியுமா? பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் பல முறை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த சாவர்க்கரை அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரராக முன்னிலைப்படுத்துகின்றனர். பிரிட்டிஷார் தயவில் விடுதலையாகி அவர்களிடமே ஓய்வூதியம் பெற்று வாழ்ந்தவர் சாவர்க்கர். அவர் எப்படி வீரர் ஆவார்" இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
கொதித்தெழுந்த பேரன்..
ராகுல் காந்தியின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சாவர்க்கரின் பேரனான ரஞ்சித் சாவர்க்கர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ளார். அவர் கூறுகையில், "ஒரு மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் பாராமல், வீர சாவர்க்கரை ராகுல் காந்தி தொடர்ந்து இழிவாக பேசி வருகிறார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்கு வங்கியை குறிவைத்து சாவர்க்கரை காங்கிரஸாரும், ராகுல் காந்தியும் தரக்குறைவாக பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். எனவே, ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் நான் புகார் அளிக்கவுள்ளேன்" என்றார்.