"துரோகி!" சிபிஐக்கு பயந்து ஓடிவிட்டார்- ஷின்டே மீது அட்டாக் மோடில் சிவசேனா! தொடரும் அரசியல் குழப்பம்
மும்பை: மகாராஷ்டிராவில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், பாஜகவை சிவசேனா மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.
கடந்த 2019 மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேபோல தேர்தலுக்குப் பின்னர் பாஜக- சிவசேனா கூட்டணியும் முறிந்தது.
இதையடுத்து சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து, மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைத்தது.

மகாராஷ்டிரா
சுமார் 3 ஆண்டுகளாக மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி சுமுகமாகவே சென்று கொண்டு இருந்தது. இருப்பினும், கடந்த மாதம் ராஜ்ய சபா தேர்தலில் சில சிவசேனா உறுப்பினர்கள் பாஜகவுக்கு வாக்களித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாஜக கூடுதலாக ஒரு இடத்தில் வென்று இருந்தது. சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா மேலவை தேர்தலிலும் இதேபோன்று நடந்ததால் அதிலும் பாஜகவுக்குக் கூடுதலாக ஒரு இடம் கிடைத்தது.

ஏக்நாத் ஷிண்டே
இந்தச் சூழலில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சில எம்எல்ஏக்கள் உடன் மாயமாகி உள்ளார். முதலில் குஜராத் மாநிலத்தில் தங்க வைக்கப்பட்ட அவர்கள், பின்னர் அசாம் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முதலில் நிலைமை விரைவில் சரியாகும் எனக் கூறி வந்த சிவசேனா தரப்பு, இப்போது மகாராஷ்டிரா சட்டசபை கலைக்கப்படலாம் என்ற ரீதியில் கருத்து தெரிவித்துள்ளது.

துரோகி
இதனிடையே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா, பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. உத்தவ் தாக்ரே அரசைக் கவிழ்க்க பாஜகவின் தந்திரம் இது என்றும் அத்தகைய முயற்சிகள் நிச்சயம் தோல்வியடையும் என்றும் சாம்னாவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும் ஷிண்டேவை "துரோகி" என்று கூறிய சாம்னா, அமலாக்கத் துறை மற்றும் சிபிஐக்கு அஞ்சி துரோகி ஓடிவிட்டார் என்று சாடி உள்ளது.

பொய் வழக்கு
மத்திய பாஜக அரசு, மகாராஷ்டிராவை ஆளும் மகா விகாஸ் கூட்டணி தலைவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு, அவதூறு பரப்ப மத்திய அமைப்புகளைப் பயன்படுத்துவதாகச் சாடி உள்ளது, கடந்த 2.5 ஆண்டுகளாகவே பாஜக இதுபோன்ற முயற்சிகளை எடுத்து வருவதாகவும் இருப்பினும், அதில் பாஜக வெற்றி பெறவில்லை என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது.

வலியுறுத்தல்
தன்னிடம் மொத்தம் 46 சிவசேனா உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக ஷின்டே தெரிவித்துள்ளார். அதேநேரம் கட்சியை பிளக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிவசேனா தலைமை மீது இருந்து அதிருப்தி காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சிவசேனா பாஜக உடன் மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications