மகாராஷ்டிராவில் புதிய அரசியல் புயல்- பாஜக மீது ஷிண்டே சிவசேனா சரமாரி புகார்- ஆட்சி கவிழுமா?
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக தங்களது கட்சியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தலைவர்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர். இதனால் ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா எனும் கட்சியை பாஜக இரண்டாக உடைத்தது. சிவசேனாவின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்களை இழுத்தது பாஜக. இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. பாஜக- ஏக்நாத் ஷிண்டே சிவசேனா இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளது.

மேலும் சிவசேனா கட்சியும் ஏக்நாத் ஷிண்டே வசமானது. இதனிடையே உத்தவ் தாக்கரே ஆட்சிக் காலத்தில் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்த கருத்துகள் ஷிண்டே அரசுக்கு எதிராகவே இருந்தன. ஆனால் உத்தவ் தாக்கரே தாமாக முன்வந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் ஷிண்டே அரசு இப்போது நீடித்துக் கொண்டிருக்கிறது. உத்தவ் தாக்கரே, அப்படி ராஜினாமா செய்யாமல் இருந்தால் அவரது அரசு மீண்டும் பதவியேற்றிருக்கும் என்பது உச்சநீதிமன்றத்தின் கருத்து.
இந்நிலையில் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலை முன்வைத்து தற்போது பாஜக, ஷிண்டே சிவசேனா கட்சிகளிடையே மோதல் வெடித்துள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 48 தொகுதிகள் உள்ளன. இதில் ஷிண்டே சிவசேனா கட்சி தலைவர்கள் 22 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்கின்றனர். ஆனால் இதனை பாஜக தலைவர்கள் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டனர். இதனால் தங்களை பாஜக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது என குமுறிக் கொண்டுள்ளனர் ஷிண்டே சிவசேனா தலைவர்கள். இதனால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஷிண்டே சிவசேனா விலகினால், அந்த இடத்தை அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கோஷ்டி அமரும் என்கிற யூகங்கள் அம்மாநில அரசியலில் உண்டு. இதனாலேயே தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென சரத்பவார் அறிவித்து பின்னர் அதனை வாபஸ் பெற்றார்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக-சிவசேனா- ஆர்பிஐ கட்சிகள் இணைந்து 48 தொகுதிகளில் போட்டியிட்டன. இதில் 41 தொகுதிகளில் பாஜக கூட்டணி வென்றது. சிவசேனா 18; பாஜக 23 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மொத்தம் 18 சிவசேனா எம்பிக்களில் 13 பேர் அப்படியே மொத்தமாக ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இணைந்துவிட்டனர். தற்போது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் 5 எம்.பிக்கள் மட்டும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications