இப்படியாகிப் போச்சே.. கட்சியாவது கிடைக்குமா? தவிப்பில் உத்தவ் தாக்கரே! உச்ச நீதிமன்றத்தில் முறையீடு
மும்பை: ஏக்னாத் ஷிண்டே அணிக்கு மேலும் ஒரு முக்கிய தலைவர் தாவியுள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
மராட்டியத்தில் பா ஜனதாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்ட உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு, தேர்தலுக்கு பின் கொள்கைகளில் மாறுபட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தை பிடித்தது.
இதனால் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா ஜனதா எதிர்க்கட்சி கட்டிலில் அமர்ந்தது. ஆனால் இன்னும் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில், சிவசேனா கட்சியில் பிளவு காரணமாக மராட்டியத்தில் அந்த கூட்டணி ஆட்சி கடந்த மாதம் 29-ந் தேதி கவிழ்ந்தது.
சிவசேனா விவகாரத்தில் தேர்தல் ஆணையம்.. உன்னிப்பாக கவனிக்கும் ஓபிஎஸ் - ஈபிஎஸ்.. ஆக்ஷனுக்கு ரெடி!
முதல்வராக ஏக்னாத் ஷிண்டே
சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்ததோடு முதல்வர் பதவியும் ஏற்றுக்கொண்டார். மராட்டிய சட்டசபையில் சிவசேனாவுக்கு மொத்தம் உள்ள 55 எம்.எல்.ஏ.க்களில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா சட்டமன்ற குழு தலைவராக சபாநாயகர் அறிவித்தார். இதேபோல நாடாளுமன்ற மக்களவையில் சிவசேனாவுக்கு உள்ள 19 எம்.பி.க்களில் 12 பேர் ஷிண்டே அணிக்கு தாவினர். ஷிண்டே அணியை சேர்ந்த ராகுல் செவாலே எம்.பி.யை சிவசேனா லோக் சபா குழு தலைவராக சபாநாயகர் ஓம்பிர்லா கடந்த செவ்வாய்க்கிழமை அங்கீகரித்தார்.
கட்சி சின்னம் யாருக்கு?
இதையடுத்து அடுத்த கட்ட நகர்வாக ஏக்னாத் ஷிண்டே தரப்பினர் 'நாங்கள் தான் உண்மையான சிவசேனா என்றும், கட்சியின் 'வில் அம்பு' சின்னத்தை எங்கள் அணிக்கு ஒதுக்க வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினர். இதேபோல் மறுப்பக்கத்தில் பால்தாக்கரேவின் மகனான உத்தவ் தாக்கரே, கட்சியையும் சின்னத்தையும் யாரும் உரிமை கோரினால் தங்களை கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை அனுப்பியிருந்தார்.
தேர்தல் ஆணையம் உத்தரவு
இதையடுத்து இரு அணிகளும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என கூறி வரும் நிலையில், அதற்கான ஆவணங்களை சமர்பிக்குமாறு தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே தரப்பு, உத்தவ் தாக்கரேவுக்கு உத்தரவிட்டது. அதற்கான அனைத்து ஆவணங்களையும் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 8-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து இரு அணிகளும் மும்முரமாக ஆவணங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு இடையில், உத்தவ் தாக்கரேவுக்கு பேரிடியாக, அவரது முகாமில் இருந்து மேலும் ஒரு முக்கிய நபரான அர்ஜுன் கோட்கர் ஏக்நாத் ஷிண்டே முகாமிற்கு மாறியுள்ளார். இதனால், உத்தவ் தாக்கரே மேலும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் முறையீடு
இந்த நிலையில், எது ரியல் சிவசேனா என்பதை நிரூபிக்குமாறு கோரிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு முறையிட்டுள்ளது. இது தொடர்பாக உத்தவ் தாக்கரே அணியினர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், " 22.07.2022-ம் தேதி தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள நடவடிக்கைகளை தொடர அனுமதிக்கக்கூடாது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் அம்மனு மீது நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை தேர்தல் ஆணையம் எந்த வித நடவடிக்கையும் எடுக்க அனுமதிக்க கூடாது. எம்.எல்.ஏ பதவி தொடர்பான வழக்கே நிலுவையில் இருக்கும் போது அதை சார்ந்து தேர்தல் ஆணையம் முடிவை எடுத்தால் ஈடு செய்ய இயலாத பாதிப்பு மனுதாரர் தரப்புக்கு ஏற்படக்கூடும். சிவசேனா கட்சியின் சட்ட விதிகளுக்கு முரணாகவும் பல சட்ட விரோத செயல்களில் ஏக்நாத் ஷிண்டே அணி ஈடுபட்டு வருகிறது" என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.