3 மணிநேரத்தில் மாற்றம்! அமைச்சரவைக்கு நோ சொல்லி துணை முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ்! பின்னணி என்ன?
மும்பை: மகாராஷ்டிரா மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். இவரை தொடர்ந்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பொறுப்பேற்றார். 3 மணிநேரத்துக்கு முன்பு அமைச்சரவையில் பங்கேற்க மாட்டேன் எனக்கூறிய நிலையில் அவர் துணை முதல்வராக பதவியேற்றதன் பின்னனி விபரம் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் இரண்டரை ஆண்டாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஷ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சியை நடத்தின. உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார்.
இந்த கூட்டணி மீது சிவசேனாவின் 40 எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்தனர். இவர்கள் அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணி திரண்டனர். இவர்கள் மீண்டும் மகாவிகாஷ் அகாடி கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
மகாராஷ்டிரா முதல்வர் நாற்காலி.. 2019ல் விட்டு கொடுக்க மறுத்த பாஜக.. இப்போது ‛ஒகே’ சொன்னது ஏன்?
புதிய ஆட்சிக்கு உரிமை கோரல்
இதனால் மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழும் நிலை உருவானது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழல் ஏற்பட்டது. இது முடியாது என்பதால் நேற்று இரவு உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பாஜக ஆட்சி அமைக்க திட்டமிட்டு வியூகம் வகுத்தது. இதனைத்தொடர்ந்து அம்மாநில ஆளுநர் கோஷ்யாரியை தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இருவரும் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
முதல்வராக ஏக்நாத் ஷிண்டே
இதன்மூலம் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்களுடன், பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியை முன்னெடுப்பது உறுதியானது. அதேநேரத்தில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்பார். துணை முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார்கள் என்று கூறப்பட்டது. இந்தநிலையில் ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ், பால் தாக்கரே கொள்கைகளுக்கு எதிராக உத்தவ் தாக்கரேவின் செயல்பாடுகள் இருந்தன. 2019ல் பாஜக ஆட்சி அமைவதையே மக்கள் விரும்பினர். இப்போதும் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் தான் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் எனக்கூறினார். இதன்மூலம் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக அறிவிக்கப்பட்டார்.
அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன்
மேலும் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ‛‛ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் பாஜக இடம்பெறும். நான் அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன். ஆனால், அரசுக்கு எனது ஆதரவு இருக்கும்'' என்றார். இதன்மூலம் தேவேந்திர பட்னாவிஸ் அமைச்சரவையில் இடம்பெற மாட்டார் என்ற தகவல் வெளியாகினது.
பட்னாவிஸ் மறுத்ததன் பின்னணி?
தேவேந்திர பட்னாவிஸ் இப்படி கூறியதன் பின்னணியில் விஷயம் உள்ளது. அதாவது மகாராஷ்டிராவில் 2014 முதல் 2019 வரை பாஜக-சிவசேனா கூட்டி ஆட்சி நடந்தது. இந்த ஆட்சியின்போது தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இருந்தார். அவரது அமைச்சரவையில் ஏக்நாத் ஷிண்டே பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் தான் தற்போது ஏக்நாத் ஷிண்டே முதல்வராகும்போது அவருக்கு கீழ் துணை முதல்வர் அல்லது அமைச்சராக பதவியேற்க தேவேந்திர பட்னாவிஸ் விரும்பவில்லை. காரணம், துணை முதல்வருக்கு என்று தனிப்பட்ட அதிகாரம் எதுவும் கிடையாது. இதற்கு கேபினட் அமைச்சருக்கான அந்தஸ்து மட்டுமே உண்டு. இதை வைத்து தான் தேவேந்திர பட்னாவிஸ் தான் அளித்த பேட்டியில் அமைச்சரவையில் பங்கேற்ற மாட்டேன் என கூறினார்.
துணை முதல்வரான பட்னாவிஸ்
இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே இன்று இரவு 7.30 மணியளவில் முதல்வராக பதவியேற்றார். இவரை தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல் அமைச்சராக பதவிபிரமாணம் எடுத்து கொண்டார். மாலை 4.30 மணியளவில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தேவேந்திர பட்னாவிஸ், ‛‛அமைச்சரவை ஆட்சியில் இடம்பெற மாட்டேன்'' எனக்கூறிய நிலையில் அவர் 3 மணிநேரத்தில் மனம்மாறி துணை முதல்வர் பதவியை ஏற்றார்.
பின்னணி என்ன?
இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது தேவேந்திர பட்னாவிஸ் பேட்டிக்கு பிறகு அவரிடம் பாஜகவின் உயர்மட்ட தலைவர்கள் பேசினயுள்ளனர். அப்போது, மகாராஷ்டிராவில் அமையும் கூட்டணி ஆட்சியில் பங்கெடுத்து கொள்ள வேண்டும். துணை முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என அறிவுரை கூறினர். இதை ஏற்று தான் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். முதல்வர் பதவி மீது தேவேந்திர பட்னாவிஸ் கண்வைத்திருந்த நிலையில் துணை முதல்வர் பதவியை அவர் விரும்பவில்லை. இருப்பினும் கட்சி மேலிடம் கூறியதை தொடர்ந்து அவர் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.
உண்மை தொண்டனாக...
முன்னதாக இதுதொடர்பாக அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் வேண்டுகோள்படி மகாராஷ்டிரா மக்களின் நலனுக்காக தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் பங்கெடுக்க உள்ளார். இந்த முடிவு மகாராஷ்டிரா மாநிலம் மீதான அவரது விசுவாசத்தை காட்டுகிறது'' என கூறியிருந்தார். இதற்கு தேவேந்திர பட்னாவிஸ் ‛‛ஒரு உண்மை தொண்டனாக கட்சியின் உத்தரவை நான் பின்பற்றுகிறேன். என்னை உயர்ந்த பதவிக்கு உயர்த்திய கட்சியில் ஒழுங்கு தான் முக்கியம்'' என தெரிவித்து இருந்தார்.