உலகின் மிகப் பெரிய கோடீஸ்வர பிச்சைக்காரர் யார் தெரியுமா? மும்பையில் 1.4 கோடியில் வீடு!
மும்பை: உலகின் மிகப்பெரிய கோடீஸ்வர பிச்சைக்காரர் யார் தெரியுமா. அவருக்கு மும்பையில் ரூ 1.4 கோடி மதிப்பிலான வீடு இருக்கிறது.
உழைத்து உண்ணக் கூடிய நிலையில் இல்லாமல் உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்ட சிலர் கோயில்கள், பொது இடங்கள், பஸ் நிலையம், ரயில்நிலையம் உள்ளிட்ட இடங்களில் யாசகம் கேட்பதை கவனித்துள்ளோம்.

அவர்களுக்கு இருக்கும் உடல் உபாதைகளால் அவர்களால் வேலை செய்து ஜீவனத்தை நடத்தும் நிலை இருக்காது. இதனால்தான் தங்களை விட வயது குறைவாக இருந்தாலும் அவர்களை கையெடுத்து கும்பிட்டு காசு கேட்கிறார்கள். இதை செய்ய அவர்கள் மனம் எத்தனை பாடுபடும்?
ஆனால் பிச்சை எடுப்பதை அனைவரும் மட்டமான விஷயமாகவே பார்க்கிறோம். பிச்சை எடுப்பவர்களைப் பார்த்தால் ஏதோ அருவருப்பாக பார்க்கிறார்கள். ஆனால் பிச்சை எடுப்பதை வெற்றிகரமான தொழிலாகக் கொண்ட பலர் இருக்கிறார்கள் என்பதை ஒரு சில விஷயங்களை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.
மும்பையில் வசிக்கும் பாரத் ஜெயின் என்பவர் உலகத்திலேயே பணக்கார பிச்சைக்காரர் என்ற பெயரை 2015 ஆம் ஆண்டு பெற்றிருக்கிறார். நீண்ட நேரம், எக்ஸ்ட்ரா ஓவர் டைம் பார்த்தாலும் சில நூறு ரூபாய்களைக் கூட சம்பாதிக்க முடியாமல் சிரமப்படும் சூழலில் பாரத் ஜெயின் தினமும் 10 முதல் 12 மணி நேரம் பிச்சை எடுத்து 2000 முதல் 2500 ரூபாய் சம்பாதிக்க முடிகிறது.
பாரத் ஜெயின் பெரும்பாலும் மும்பையின் ஆசாத் மைதானத்திலோ சத்ரபதி சிவாஜி முனையத்திலோ பிச்சை எடுப்பதைக் காணலாம். இவரது மாத வருமானம் ரூ 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை இருக்கும் என்கிறார்கள். பாரத் ஜெயினுக்கு மும்பையில் ரூ1.2 கோடி மதிப்பில் இரு வீடுகள் இருப்பதாக தெரிகிறது.
அது போல் அவர் வசம் உள்ள சொத்துகளின் மதிப்பு 7.5 பில்லியன் டாலர் என தெரிகிறது. அவர் தானேயில் இரு கடைகளை வாங்கியுள்ளார். அவற்றை வாடகைக்கு விட்டதில் இருந்து அவருக்கு மாதந்தோறும் ரூ 30 ஆயிரம் வருமானம் கிடைத்து வருகிறது. இவர் வறுமை காரணமாக படிப்பைத் தொடர முடியாத நிலையில் அவர் இருந்ததால் பிச்சை எடுப்பதையே தொழிலாகச் செய்ய முடிவு செய்துள்ளார்.
இவருக்கு மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். தான் படிக்காத போதும் தனது பிள்ளைகளை கான்வென்ட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார். அவர்கள் இருவரும் இப்போது கல்லூரி படிப்பையும் முடித்து பட்டம் பெற்றுள்ளனர். இத்தனை செழிப்புடன் இருந்தும் பாரத் ஜெயின் தொடர்ந்து தெருக்களில் பிச்சை எடுக்கிறார்.
இத்தனை சொத்துகள் இருந்தும் தனது குடும்பத்தினருடன் பரோலில் ஒருசிறிய வீட்டில் பாரத் ஜெயின் வசித்து வருகிறார். இவருடன் அவருடைய தந்தையும் தம்பியும் வசித்து வருகிறார்கள். அவருடைய மனைவி ஒரு ஸ்டேஷனரி கடையை வைத்து நடத்தி வருகிறார். மனைவியும் மகன்களும் பாரத்தை பிச்சை எடுப்பதை விட்டுவிடுமாறு கூறுகிறார்கள். ஆனால் பாரத்தான் கேட்கவில்லை. பாரத் ஜெயின் பார்ப்பதற்கு கிழிந்த துணிமணிகளை அணிந்துள்ளார். அவருடைய முடியும் அழுக்காக இருக்கிறது. அவரை பார்த்தால் அவர் ஏழ்மை நிலையில் இருக்கிறார் என்றுதான் பலர் நினைப்பார்கள்.











Click it and Unblock the Notifications