பொங்கி பெருக்கெடுத்தோடும் காவிரி: கேஆர்எஸ் அணையில் பாகினா பூஜை நடத்திய சித்தராமையா!
மைசூர்: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை வெளுத்தெடுத்ததால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் அணை (கேஆர்எஸ்) , காவிரியின் துணை நதியான கபிலா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கபினி அணை ஆகியவை நிரம்பி வினாடிக்கு 1.65 லட்சம் கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரியில் பெருமளவு தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் கேஆர்எஸ், அணையில் இன்று காவிரி தாய்க்கு சிறப்பு செய்யும் வகையில் "பாகினா" பூஜை நடத்தினார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா.
கர்நாடகாவின் கேஆர்எஸ் அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி. தற்போது கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 123.34 அடி. கேஆர்எஸ் அணைக்கான நீர்வரத்து 1.17 லட்சம் கன அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து மட்டும் 1.30 லட்சம் கன அடிநீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 32,000 கன அடியாக உள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 35,000 கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டுக்கு 1.65 லட்சம் கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.

காவிரி அணைகளில் இருந்து பெருமளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால் கர்நாடகாவின் காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் தமிழ்நாட்டின் மேட்டூர் அணை நீர்மட்டமும் கிடுகிடுவென அதிகரித்தது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 20,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் காவிரி கரையோர கிராமங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேஆர்எஸ், கபினி அணைகளில் பாகினா பூஜை நடத்த இருக்கிறார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா. கேஆர்எஸ் அணைக்கு சென்ற சித்தராமையா, பாகினா பூஜை நடத்தினார். இதன் பின்னர் மாலையில் கபினி அணையில் பாகினா பூஜை நடத்தப்படுகிறது. கர்நாடகாவில் அணைகள் நிரம்பி வழிந்தால் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பாகினா பூஜை நடத்தப்படுவது வழக்கம்.












Click it and Unblock the Notifications