எப்போ பாரு மேகி.. வேறு சமையல் பண்றது இல்லை.. மனைவியை விவாகரத்து செய்த கணவன்.. கர்நாடகாவில்தான்!
மைசூரு: கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் காலை, மதியம், இரவு என மேகி நூடுல்ஸ் மட்டுமே சமைத்து கொடுத்ததால் மனைவியிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து வழங்கப்பட்டது என மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி எம்எல் ரகுநாத் கூறினார்.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் எம்எல் ரகுநாத். இவர் இதற்கு முன்பு பல்லாரி மாவட்டத்தில் நீதிபதியாக பணியாற்றினார்.
இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்
இந்நிலையில் திருமணம் தொடர்பான பிரச்சனை குறித்தும், கணவன் மனைவி இடையேயான பிரச்சனையை தீர்ப்பது பற்றியும் எம்எல் ரகுநாத் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
மேகி வழக்கு
தற்போதைய காலக்கட்டத்தில் சிறுசிறு பிரச்சனைகளுக்காக தம்பதி விவாகரத்து பெற முடிவு செய்கின்றனர். நான் விசித்திரமான வழக்கு ஒன்றை விசாரித்துள்ளேன். பல்லாரி மாவட்ட நீதிபதியாக இருந்தபோது வழக்கு ஒன்று வந்தது. அதாவது தனது மனைவிக்கு மேகி நூடுல்ஸை தவிர வேறு எதுவும் சமைக்க தெரியவில்லை. காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் நூடுல்ஸ் மட்டுமே உணவாக சமைத்து கொடுக்கிறார். கடைக்குச் சென்று மளிகை பொருட்கள் வாங்காமல் நூடுல்ஸ் பாக்கெட்டுகள் மட்டுமே வாங்கி வருகிறார். இதனால் மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என ஒருவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை மேகி வழக்கு என்று குறிப்பிட்டு விசாரித்து வந்தோம். இறுதியில் இருவரும் பரஸ்பரம் விவகாரத்து பெற்று கொண்டனர்.
900 வழக்கில் வெறும் 30 மட்டுமே..
பொதுவாக திருமண உறவில் ஏற்படும் தகராறுகளை சரி செய்வது கொஞ்சம் கடினமானதுதான். இதனால் அவர்களின் குழந்தைகளை கருத்தில் கொண்டு மட்டுமே இருவரையும் ஒன்று சேர்க்க சில உணர்வுப்பூர்வ விஷயங்களை கையில் எடுப்போம். இது பெரும்பாலும் மன ரீதியிலானதுதான். நீதிமன்றங்களில் 800-900 விவாகரத்து வழக்குகளில் வெறும் 20 - 30 வழக்குகளில் மட்டுமே தம்பதியை சேர்த்து வைக்க முடிகிறது. லோக் அதாலத்தில் 110 விவாகரத்து வழக்குகளில் 32 வழக்குகளில் தம்பதிகளை இணைத்து வைக்க முடிகிறது.
நகரங்களில் அதிகரிப்பு
கடந்த சில ஆண்டுகளாக விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளன. திருமணம் முடிந்து ஓராண்டு சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே விவாகரத்துக் கோரி வழக்கு தொடர முடியும். இந்த சட்டம் மட்டும் இல்லையென்றால் திருமண மண்டபத்திலிருந்து நேராக விவாகரத்துக் கேட்டு நீதிமன்றதுக்கு வந்துவிடும் நிலை உள்ளது. இத்தகைய பிரச்சனை அனைத்துக்கும் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசாதது தான் காரணம். பிரச்சினை குறித்து வாழ்க்கை துணையுடன் மனம்விட்டு பேசினாலே விவகாரத்து நிலை வராது. கிராமங்களை காட்டிலும் நகரப் பகுதிகளில் விவாகரத்து அதிகரித்து வருகிறது.
காரணம் என்ன?
இதற்கு பின்னணியிலும் ஒரு காரணம் உள்ளது. கிராமப்புறங்களில் பெண்கள் பெரியளவில் வருவாய் ஈட்ட முடியாத நிலை உள்ளதால் அவர்கள் சகித்து வாழ்கின்றனர். ஆனால் நகர பகுதிகளில் பெண்கள் நன்கு படித்து வேலைக்குச் செல்வோராக இருப்பதால் அங்கு நிலைமை வேற மாதிரி உள்ளது'' என்றார்.