ஊழல் பற்றி பேச மோடிக்கு என்ன தகுதி இருக்கு? 7 இமாலய ஊழலை அம்பலப்படுத்தியுள்ளது CAG.. ஸ்டாலின் தாக்கு
நாகப்பட்டினம்: சிஏஜி அறிக்கையால் மத்திய பாஜக அரசின் 7 விதமான ஊழல் அம்பலமாகியுள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். ஊழலைப் பற்றிப் பேச பிரதமர் மோடிக்கு தகுதி உண்டா? என்றும் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி செல்வராஜ் இல்ல திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து உரையாற்றிய அவர், பாஜக அரசின் ஊழல்களை குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்தார்.

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "ஊழலைப் பற்றி பேச மோடிக்கும் பிஜேபிக்கும் என்ன அருகதை உள்ளது? ஊழல் குறித்து பேச பிரதமர் மோடிக்கு தகுதியில்லை. சி.ஏ.ஜி. அறிக்கையால் மத்திய அரசின் 7 விதமான ஊழல் அம்பலமாகியுள்ளது. பாரத்மாலா, சுங்கச்சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், விமான வடிவமைப்பு திட்டம், உள்ளிட்ட 7 திட்டங்களில் ஊழல் நடந்துள்ளது CAG அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் போலியான செல்போன் நம்பர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நம்பரில் 7 லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளது. இந்தத் திட்டத்தில் இறந்த 88 லட்சம் பேருக்கு சிகிச்சையும், இறந்த இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு காப்பீடு தொகையும் வழங்கப்பட்டு முறைகேடு நடைபெற்றுள்ளதாக சிஏஜி குறிப்பிட்டுள்ளது.
பாரத் மாலா திட்டத்தில் சாலைகளுக்கு நிர்ணயித்ததை விட இரண்டு மடங்கு கூடுதல் தொகை வழங்கப்பட்டுள்ளது. துவாரகா விரைவு நெடுஞ்சாலை திட்டத்தில் 278 மடங்கு கூடுதல் செலவிடப்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.18 கோடியாக இருந்த செலவு ரூ.250 கோடியாக உயர்த்தி ஊழல் செய்யப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் முறைகேடான வசூல் நடைபெற்று உள்ளது. நாடு முழுவதும் உள்ள 600 சுங்கச்சாவடியில் ஐந்தில் மட்டும் சிஏஜி ஆய்வு செய்துள்ளது. 5 சுங்கச்சாவடிகளில் மட்டும் சிஏஜி ஆய்வு செய்ததில் ரூ.132 கோடி ஊழல் அம்பலமாகியுள்ளது. நாடு முழுவதும் ஆய்வு நடத்தினால் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தெரிய வரும் என்று சிஏஜி தெரிவித்துள்ளது.
இது போன்ற பாஜக அரசின் முறைகேடுகள் குறித்து, திமுக அரசும், அதன் கூட்டணி கட்சிகள் பேசுகின்றன. இதனால் ஆத்திரமடைந்து பாஜக அரசு வருமான வரித்துறை, அமலாக்கத் துறைகளை ஏவி வருகிறது. இதைக் கண்டு அஞ்சுகிற கட்சி திமுக அல்ல. திமுக பனங்காட்டு நரி, சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சாது. தமிழக மக்களை இந்திய மக்களை மோடி அரசு இனியும் ஏமாற்ற முடியாது." என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், மதக்கலவரத்தை ஏற்படுத்தி நாட்டைப் பிளவுப்படுத்தும் கொடிய ஆட்சி நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்றும் தேர்தலில் நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே 'இந்தியா' என்ற கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி உருவாக தமிழகத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகள் காரணமாக உள்ளன" எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications