உண்மைய பேசணும்.. முன்னாள் முதல்வரான நீங்களே இப்படி பேசலாமா? எடப்பாடி பழனிசாமியை தாக்கிய முத்தரசன்!
நாகப்பட்டினம் : தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்கவில்லை அவர் பொறுப்பேற்றது தமிழ்நாடு மாநில ஆளுநராகத்தான். ஆளுநர் ரவி வேண்டுமென்றே விஷமம் செய்கிறார். முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியும் ஆளுநருக்கு ஆதரவாகப் பேசுவது தவறு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
ஒரத்தநாடு, பாப்பாநாடு உள்ளிட்ட ஊர்களின் பெயர்களையும் மாற்றுவதா என தமிழக ஆளுநருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசிக்காத நிலையில், முதல்வர் ஸ்டாலின், ஆளுநரின் பேச்சை அவைக்குறிப்பில் ஏற்றக்கூடாது என தீர்மானம் கொண்டு வந்தார்.
இதையடுத்து அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி. முன்னதாக, தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று அழைப்பதே சரியானது என ஆளுநர் பேசி இருந்தார். ஆளுநரின் இந்த செயல்பாடுகள் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆளுநர் சர்ச்சைக்கு மத்தியில் அமைச்சர் அன்பில் மகேஷ் 'சம்பவம்’.. ஸ்கூல் போர்டில் எழுதினதை பாருங்க!
ஆளுநர் செயலுக்கு கண்டனம்
2023ம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரையாற்றிய போது, சமூக நீதி, திராவிட மாடல், தமிழ்நாடு, அம்பேத்கர், அண்ணா, பெரியார், கருணாநிதி உள்ளிட்ட வார்த்தைகளை உச்சரிக்காமல் தவிர்த்தார். அதேபோல் சில வாசகங்களை அவராகவே சேர்த்து உரையாற்றினார். இதற்கு சட்டசபையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததோடு, தீர்மானமும் கொண்டு வந்தார். இதனால் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாகவே ஆளுநர் ஆர்.என்.ரவி அவையிலிருந்து வெளியேறினார். ஆளுநரின் மரபு மீறிய செயலுக்கு விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
மாநில பிரச்சனை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "ஆளுநரின் செயலுக்கு ஆதரவு தெரிவிக்கும் எடப்பாடி பழனிசாமி, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உண்மையைப் பேச வேண்டும். ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் தனிப்பட்ட பிரச்சனை கிடையாது. இது மாநில பிரச்சனை. முதல் கூட்டத்தில் ஆளுநர் பேசுவது சபை மரபு. தமிழக அரசு கொடுப்பதை படித்துவிட்டுச் செல்வதுதான் ஆளுநரின் வேலை. ஆளுநர் ஒப்புதல் வாங்கிய பிறகுதான் அறிக்கையை அச்சிடவே முடியும்.
எடப்பாடிக்கு தெரியாதா?
முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி இப்படி பேசுவது தவறு. தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்கவில்லை அவர் பொறுப்பேற்றது தமிழ்நாடு மாநில ஆளுநராகத்தான். ஆளுநர் ரவி வேண்டுமென்றே விஷமம் செய்கிறார். ஒரு மாநிலத்தின் பெயர் வைப்பதற்கு ஒருவர் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்துள்ளார். தமிழ்நாடு உருவாக கம்யூனிஸ்ட் கட்சியின் புபேஷ்குப்தா, ராமமூர்த்தி, அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோரின் பங்கு உள்ளது. தமிழ்நாடு என்று சொல்வதில் ஆளுநருக்கு என்ன கஷ்டம்?
கலகம்
நாடு என முடிவதால் தமிழ்நாடு என்ற பெயர் பிரிவினையை தூண்டுவதாகுமா? தஞ்சாவூர் பக்கம் ஒரத்தநாடு உள்ளது. பாப்பாநாடு, ஒக்கநாடு என நாடு என முடியும் பல ஊர்கள் உள்ளன. அவற்றை என்ன செய்வது? தமிழ்நாட்டில் கலகம் விளைவிக்க மேற்கொள்ளப்படும் ஆளுநரின் முயற்சி பலிக்காது." எனத் தெரிவித்துள்ளார்.
போராட்டம்
மேலும் பேசிய முத்தரசன், "தற்போதைய மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகச் செயல்படுகிறது. தொழிற்சாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள் இதுவரை நிரந்தரம் செய்யப்படாத நிலையில் மத்திய அரசை கண்டித்து ஜனவரி 24ஆம் தேதி மறியல் போராட்டம் நடைபெற உள்ளது." எனத் தெரிவித்தார்.
எடப்பாடி பேசியது
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரை அமர வைத்துக்கொண்டு ஒரு முதலமைச்சர் இப்படி பேசுவது மரபுக்கு எதிரானது" என விமர்சித்திருந்தார். ஆளுநர் பேச்சுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்ததை சுட்டிக்காட்டி ஈபிஎஸ் விமர்சித்திருந்தார். அதைக் குறிப்பிட்டே, முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி எல்லாம் தெரிந்தும், ஆளுநருக்கு ஆதரவாகப் பேசுவதா எனக் கண்டித்துள்ளார்.