பெற்ற பிள்ளையா இருந்தாலும் கொல்வாரே இந்தியன் தாத்தா.. நிஜத்தில் நான் அப்படித்தான்- கமல்ஹாசன் ஆவேசம்
நாகை: நிஜத்திலும் இந்தியன் தாத்தாவாக மாறி உறவுகளே ஊழல் செய்தாலும் விட மாட்டேன் என கூறியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.
நாகை மாவட்டம் திருப்பூண்டி பகுதியில் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர்.சித்துவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கீழ்வேளூர் தொகுதி வேட்பாளர் டாக்டர்.சித்துவின் சொந்த வயலில் தயார் செய்திருந்த ஹெலிபேடில் கமலஹாசன் வந்திறங்கினார். அவருக்கு பூங்குத்து கொடுத்து வேட்பாளர் சித்து வரவேற்பளித்தபோது வயல் வெளியில் திரண்டிருந்த பெண்கள், குழந்தைகள் என கிராமமக்கள் நூற்றுக்கணக்கானோர் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய கமலஹாசனை ஆர்வத்துடன் பார்க்க முண்டியடித்து ஓடிவந்தனர்.

ஹெலிகாப்டர் பயணம்
அவர்களை பார்த்து புன்னகையோடு கையசைத்து அங்கிருந்து திறந்தவெளி வாகனம் மூலம் சென்று திருப்பூண்டி கடைத்தெருவில் கீழ்வேளூர் தொகுதி வேட்பாளர் டாக்டர். சித்துவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். கமலஹாசன் பேச்சை தொடங்கிய நிலையில் மைக் மக்கர் செய்ததால், அதனை சரி செய்யும் முயற்சியில் தொண்டனர்கள் ஈடுபட்டனர்.

ஊழல் ஆறு
பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது: காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. தமிழகத்தில் ஊழல் ஆறு ஓடிக்கொண்டு இருக்கிறது.
வெறும் ஊழல் பற்றி மட்டும் நான் பேசுவதில்லை. சிறப்பான பல திட்டங்களுடன் எங்கள் கட்சி வந்துள்ளது.

சிறப்பான திட்டங்கள்
ஏன் சிறப்பான திட்டம் என்று சொல்கிறேன் என்றால், வெட்கம் கெட்டு, எதிரணி கூட எங்களது திட்டங்களை காப்பி அடிக்கின்றனர். இதை வைத்தே நீங்கள் புரிந்துகொள்ளலாம் எங்களது திட்டங்கள் எவ்வளவு தொலை நோக்கு கொண்டவை என்பதை.

மக்கள்தான் முக்கியம்
நல்லவர்களை தேடித்தேடி இவர் என் சகோதரர், இவர் என் தம்பி என்று தமிழகம் முழுக்க நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். நான் திருடனை அப்படி சொல்ல மாட்டேன், கொலைகாரனை எனது தம்பி அவரை காப்பாற்றுங்கள் என்று சொல்லமாட்டேன். மக்களுக்கு துரோகம் செய்பவர் என் உறவாக இருந்தாலும் விடமாட்டேன்.

இந்தியன் தாத்தா
சினிமாவில் இந்தியன் தாத்தாவாக வந்து ஊழல் செய்த பெற்ற பிள்ளையைக் கொலை செய்கிற பாத்திரத்தில் நடித்திருப்பேன். சினிமாவில் மட்டும் கிடையாது, நிஜ வாழ்க்கையிலும் செய்வேன். அது எப்படி எப்படி இருக்கிறீர்கள் நீங்கள் என்று கேட்டால்.. எங்கள், அப்பா எங்களை அப்படித்தான் வளர்த்துள்ளார். ஜாதி எண்ணம் எனக்கு இல்லாமல் போக காரணம் பெரியார் மட்டும் கிடையாது. எங்கள் வீட்டின் பெரியவர் இருந்தார். எனது தந்தை. அவர் என்னை சாதியற்ற சமூகமாக சொல்லி வளர்த்தார். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.












Click it and Unblock the Notifications