"தமிழணங்கே" நாகர்கோவிலில் 3200 மாணவிகள் ஒரே நேரத்தில் பாடிய தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும்!
நாகர்கோவில்: நாகர்கோவிலில் நடந்த சுதந்திர தின அமுத பெருவிழாவில் ஒரே நேரத்தில் 3,200 மாணவிகள் ஒன்று கூடி தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடி சாதனை படைத்துள்ளதாக அந்த மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 75 ஆவது ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழா நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வரும் 15 ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது.
நாகர்கோவிலில் உள்ள புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் அரவிந்த் இந்த நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
“தாய் வழி வந்த தங்கங்கள்” ஓஹோ.. எடப்பாடிக்கு சிக்னல்.. விடாமல் தூது விட்டு பார்க்கும் ஓபிஎஸ் தரப்பு!
3200 மாணவிகள்
இந்த விழாவில் 3,200 மாணவிகள் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடினர். அது போல் தேசிய கீதத்தையும் அந்த மாணவிகள் பாடியிருந்தனர். மேலும் ஆட்சியர், ஆசிரியர்கள், மாணவிகள் இணைந்து தேசியக் கொடியின் மூவர்ண நிறத்தினாலான பலூன்களை பறக்கவிட்டனர்.
மாவட்ட ஆட்சியர்
பின்னர் இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் அரவிந்த் பேசுகையில், விழாவில் 3,200 மாணவிகள் ஒரு சேர தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதத்தை பாடிய போது அனைவரிடத்திலும் தேச பக்தியும் தமிழ் பற்றையும் பார்க்க முடிந்தது. இது உண்மையில் பெரிய சாதனையாகும்.
கல்வித் தரம்
மாணவர்கள் எப்போதும் போதை பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது. செல்போன்களையும் தவறான வழிகளில் பயன்படுத்தக் கூடாது. உடற்பயிற்சி, யோகா மற்றும் விளையாட்டுகளில் மாணவர்கள் நேரத்தை செலவிட வேண்டும். கல்வி மட்டுமே நமது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்பது புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
பலூன்கள்
இதைத் தொடர்ந்து நாகர்கோவில் கோட்டார் கவிமணி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அமுத பெருவிழா நிகழ்ச்சியிலும் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு மூவர்ண வண்ண பலூன்களை பறக்கவிட்டார். அவருடன் சேர்ந்து ஆசிரியர்கள், மாணவர்களும் பலூன்களை பறக்கவிட்டனர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் தேசிய தலைவர்களின் வேடம் அணிந்து வந்தனர்.