நாங்க இந்து சேனா.. மோடி கட்சி.. கல்லூரியில் டொனேசன் கேட்டு மிரட்டிய 3 பேர் மீது வழக்குப்பதிவு!
நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை கேட்டு தகராறு செய்த இந்து சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நன்கொடை கேட்டு இந்து சேனா கட்சி நிர்வாகிகள் எனக் கூறிக்கொண்டு சிலர் மிரட்டும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

கல்லூரிக்குள் நுழைந்த அவர்கள் நன்கொடை கேட்டதற்கு இதே பெயரில் நன்கொடை கேட்டு பலர் வருவதால் நன்கொடை வழங்க கல்லூரி நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர். மேற்கு மாவட்டத்தில் இருந்து வந்து இங்கு நன்கொடை கேட்கிறீர்கள். கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை வரச் சொல்லுங்கள் என கல்லூரி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
அப்போது நாங்கள் இந்து சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள், நரேந்திர மோடி கட்சிக்காரர்கள், எங்களுக்கு பணமில்லையா, முதலில் 'ஜி' என சொல்லுங்கள் என மிரட்டும் தொனியில் அவர்கள் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்து சேனா அமைப்பினர் எவ்வளவு கேட்டும் கல்லூரி நிர்வாகத்தினர் நன்கொடை வழங்க மறுத்ததால் கத்திப் பேசியவாறே மூவரும் காரில் ஏறி அங்கிருந்து வெளியேறினர். இந்நிலையில், நன்கொடை கேட்டு மிரட்டுவதாக, இந்து சேனா அமைப்பினர் மீது கல்லூரி நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில், தனியார் கல்லூரிக்குள் நுழைந்து பணம் கேட்டு மிரட்டிய புகாரில் இந்து சேனா நிர்வாகி பிரதீப்குமார், பிரதீஷ், மூர்த்தி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மூவரையும் கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications