குடும்ப பாரத்தை சுமந்த 14 வயது சிறுமி.. அக்காள் கணவர் உள்பட 12 கொடூரன்களால் வேட்டையாடப்பட்ட கொடூரம்
நாமக்கல்: நாமக்கல் அருகே 14 வயது சிறுமியை அக்காள் கணவர் உள்பட 11 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி. இவருக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இதில் மூத்த 2 மகள்களுக்கும் திருமணம் நடந்து விட்டது.
3ஆவது மகள் (14 வயது) 6 ஆவது வரை படித்துவிட்டு அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலைக்கு சென்று வந்தார். தனது அக்காள் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.
பலாத்காரம்
இந்த நிலையில் அக்காள் கணவர் சின்ராஜ், தனது வீட்டில் தங்கியிருந்த அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். தன்னை விட்டுவிடுமாறு சிறுமி கெஞ்சியும் அவர் மீண்டும் மீண்டும் அந்த சிறுமியை பலாத்காரம் செய்து வந்தார்.
பெற்றோர் கடன்
இதனால் இந்த சிறுமி வீட்டை விட்டு வெளியே சென்று அருகில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். அந்த வீட்டின் உரிமையாளரும் அந்த சிறுமியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தார். இதை அறிந்த சிறுமி அதிர்ச்சி அடைந்தார். மேலும் பெற்றோர் கடன் வாங்கி தனது அக்காள்களுக்கு திருமணம் செய்ததை எண்ணி பார்த்தார்.
தந்தை அவதி
அந்த கடனை செலுத்த முடியாமல் தனது தந்தை அவதியுறுவதையும் எண்ணினார். தாய் கூலி வேலைக்கு சென்றாலும் அது குடும்பச் செலவிற்கே போதவில்லை. இதனிடையே சிறுமியின் தந்தை உடல்நல பாதிப்பால் வேலைக்கு செல்ல இயலவில்லை. அவரது மருத்துவ செலவை சமாளிக்க முடியாததால் இந்த சிறுமியும் வேலை பார்க்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார்.
வீட்டு உரிமையாளரின் உறவினர்கள்
இவற்றை எல்லாம் எண்ணிக் கொண்டு அந்த சிறுமி வீட்டு வேலை பார்த்தார். இந்த சிறுமியின் நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த உரிமையாளர் அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் பன்னீர், மூர்த்தி, கண்ணன், அபி, கோபி, சேகர், சங்கர், சரவணன் ஆகியோரும் மிரட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர்.
பஞ்சாயத்து
இதையடுத்து சின்ராஜின் நண்பர்கள் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த குமார், வடிவேல், சுந்தரம் உள்ளிட்டோரும் அந்த சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து தாயிடம் அந்த சிறுமி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். பின்னர் பஞ்சாயத்தை கூட்டி தாயார் ஊர் பெரியவர்களிடம் விஷயத்தை சொல்லியுள்ளார்.
இழப்பீட்டு தொகை
அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த குமாரிடம் இருந்து ரூ 10 ஆயிரத்தை இழப்பீட்டு தொகையாக வாங்கிக் கொடுத்துள்ளனர். அந்த தொகையை சிறுமியின் தந்தையின் சிகிச்சைக்கு பயன்படுத்தியதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சித பிரியாவிடம் கூறியதை அடுத்து விசாரணையின் பேரில் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் தலைமறைவான ஒருவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.