அண்ணன் -தங்கைக்கு தசைச் சிதைவு நோய்! 24 மணி நேரத்தில் வீடு கட்ட நடவடிக்கை! திமுக MPயின் மனிதநேயம்!
நாமக்கல்: நாமக்கல் அருகே ஒரே வீட்டில் அண்ணனும் தங்கையும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு 24 மணி நேரத்தில் வீடு கட்ட நடவடிக்கை எடுத்ததுடன், கட்டுமான பணிகளுக்காக தனது ஊதியத்திலிருந்து ரூ.2 லட்சத்தை கொடுத்திருக்கிறார் திமுக ராஜ்யசபா உறுப்பினர் ராஜேஷ்குமார்.
தசைச் சிதைவு நோய் என்பது கொடூரத்திலும் கொடூரமானது. ஆளை மெல்ல மெல்ல கொல்லும் இந்த நோயின் பிடியில் சிக்கிக் கொண்டவர்கள் நாளடைவில் நடையின்றி படுத்த படுக்கையாக கிடக்க நேரிடுவார்கள். உதவ ஆளின்றி அவர்களால் வாழவே முடியாது என்ற சூழல் உருவாகும்.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரது மகன் மற்றும் மகள் தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். சொந்த வீடு இல்லாமல் தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார் தங்கபாண்டியன்.
இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி பாதிக்கப்பட்ட இருவரையும் சந்தித்து நலம் விசாரித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆணையை வழங்கினார். அதுமட்டுமல்ல பட்ட வழங்கிய 24 மணி நேரத்தில் வீடு கட்ட நடவடிக்கை மேற்கொண்டு, பட்டா வழங்கப்பட்ட இடமான பேட்டபாளையத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் 430 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டும் பணிகளையும் ராஜேஷ்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.

மேலும், வீடு கட்டும் பணிக்காக மாநிலங்களவை உறுப்பினருக்கான தனது மாத ஊதியத்திலிருந்து ரூ.2 லட்சம் கொடுத்து உதவியுள்ளார் ராஜேஷ்குமார் எம்.பி. உடல்நலமில்லாத 2 பிள்ளைகளை வைத்துக்கொண்டு இனியும் இன்னொரு வாடகை வீட்டிற்கு மாறி பெற்றோர் சிரமப்படக் கூடாது என்பதால் தான் இந்த விவகாரத்தில் இவ்வளவு வேகம் காட்டப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications