திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல.. நாமக்கல்லில் அமைச்சர் சேகர்பாபு பேச்சு
நாமக்கல்: திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல என நாமக்கல்லில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்றைய தினம் ஆஞ்சநேயர் அல்லது அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ஆஞ்சநேயர் கோயில்களில் வடைமாலை சாற்றப்படும்.
அது போல் வெண்ணெய் காப்பு அலங்காரமும் செய்யப்படும். இந்த விழாவையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் நடை திறக்கப்பட்டு 1,00,008 வடைமாலை சாத்தப்பட்டுள்ளது.

மலர் அலங்காரம்
கோயில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நன்னாளில் அனுமனை வழிபட்டால் சிவனையும் விஷ்ணுவையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என சொல்வதுண்டு. இதனால் வாழ்வில் அனைத்து துன்பங்களும் தொல்லைகளும் நீங்கும் என்பது ஐதீகம்.

கோயிலில் குவிந்த பக்தர்கள்
இதனை காண இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கொரோனா பரவி வரும் சூழலில் அனைத்து கோயில்களிலும் புத்தாண்டு மற்றும் அனுமன் ஜெயந்தி விழா கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளுடன் தொடங்கியது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த விழாவில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தனும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆன்மீகம்
அப்போது அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேகசுகையில், திமுக ஆன்மீகத்திற்கு எதிரான அரசு அல்ல. திமுக ஆட்சி கட்டிலில் ஏறிய பிறகுதான் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயில்களில் தமிழில் அர்ச்சனை, ஓதுவார்களுக்கு ஊக்கத் தொகை, பயிற்சி பள்ளிகள், அர்ச்சகர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை, கோயில்களின் பெயரில் அறக்கட்டளை பள்ளிகள், கல்லூரிகள் என பல திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன.

திட்டங்கள் மக்கள்
மக்கள் நலனை கருத்தில் கொண்டு மேலும் பல திட்டங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 437 பேரிடம் இருந்து ரூ 1,640 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். அது போல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தையும் திமுக அரசு தொடங்கிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications