பூசாரியிடம் ரூ.21ஆயிரம் லஞ்சம் கேட்ட அதிகாரிகள்..பொறி வைத்து பிடித்த போலீஸ்..பரபரத்த நாமக்கல்
நாமக்கல்: கோவிலில் தினமும் பூஜை செய்ய வேண்டும் என்றால் வாரம் ரூ.21 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டு நச்சரித்த அறநிலையத்துறை அதிகாரிகளை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தட்டில் விழும் தட்சணை காசை லஞ்சம் கேட்ட அதிகாரியைப் பற்றியும் அவர் எப்படி சிக்கினார் என்றும் பார்க்கலாம்.
லஞ்சம் கேட்ட அந்த அறநிலையத்துறை அதிகாரிகளின் பெயர் ரமேஷ், லட்சுமி காந்தன் என்பதாகும். இவர்கள் இருவருமே அரசாங்கம் தரும் சம்பளத்தையும் பெற்றுக்கொண்டு பூசாரியிடம் லஞ்சம் கேட்டுள்ளனர். அதுவும் வாரா வாரம் லஞ்சமாக ரூ.21 ஆயிரம் தர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர்.
புரட்டாசி மாதம் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் ரூ.21 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். இவர்கள் லஞ்சம் கேட்டது அந்த சாமிக்கே சரி என படவில்லை போல சமயம் பார்த்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக சிக்கி இப்போது சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர்.

பக்தர்கள் கூட்டம்
நாமக்கல் மாவட்டம், முத்துகாப்பட்டி அருகே உள்ளது பிரசித்தி பெற்ற பெரியசாமி கோயில். இக்கோயிலுக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த கோவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தோறும் திரளான பக்தர்கள் ஆடு, கோழி பலி கொடுத்து பூஜை செய்வது வழக்கம்.

அறநிலையத்துறை அதிகாரி
நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் லட்சுமிகாந்தன்,51. இவர் சேந்தமங்கலம் அருகே உள்ள முத்துகாப்பட்டி பெரியசாமி கோவிலையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.
இக்கோவிலில், புதுக்கோம்பையைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரும் அவரது இரு சகோதரர்களும் பூஜைகளை செய்து வருகின்றனர்.

பூசாரியிடம் லஞ்சம்
பூசாரிகளுக்கு பூஜை செய்யும் முறையை தொடர்ந்து வழங்குவதற்காக, நாமக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி கமிஷனர் ரமேஷ், நைனாமலை கோயில் செயல் அலுவலர் லட்சுமிகாந்தன் ஆகியோர் பூசாரிகளிடம் லஞ்சம் பெற்று வந்துள்ளனர். புரட்டாசி மாதம் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் ரூ.21 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும், இல்லை எனில் கோவில் பூஜை பணியை தொடர்ந்து செய்ய விடமாட்டேன் என்றும் செயல் அலுவலர் லட்சுமி காந்தன் கூறியதாக தெரிகிறது.

பொறி வைத்து பிடித்த போலீஸ்
பூசாரி வேலை செய்து வரும் தங்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து லஞ்சம் கேட்கின்றனர் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.21 ஆயிரத்தை அண்ணாதுரை நேற்று ஏளூர் அகரம் பகுதியில் வைத்து செயல் அலுவலர் லட்சுமி காந்தனிடம் கொடுத்து உள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான குழுவினர் லட்சுமிகாந்தனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கியது ஏன்
பின்னர் அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் , லஞ்சம் வாங்க சொன்னதால் தான் பூசாரியிடம் லஞ்சம் வாங்கினேன் என கூறி உள்ளார். அதற்கான ஆடியோவையும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

சஸ்பெண்ட் நடவடிக்கை
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி ஆணையர் ரமேஷையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இதனிடையே லஞ்சம் பெற்ற புகாரில் கைதான 2 பேரையும் சஸ்பெண்டு செய்ய உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications