பாஜக தொண்டன்.. அரசு அதிகாரி.. பணப் பறிப்புக்கு பலே ஸ்கெட்ச்.. ஆக்ஷன் எடுத்த நாமக்கல் போலீஸ்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி, பாஜகவின் தொண்டன் என்று கூறிக் கொண்டு கோழிப் பண்ணைகளில் மிரட்டி பணப் பறிப்பில் ஈடுபட்ட பாஜக முன்னாள் நிர்வாகியை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு அதிகாரி, சிஎம் செக்ரெட்டரி, மினிஸ்டர் பிஏ என்று கூறி காலம் காலமாக பல்வேறு மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எனக்கு அவரை நல்லா தெரியும், ஆனால் அவருக்கு என்னைத் தெரியாது என்ற சினிமா நகைச்சுவையைப் போல அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் பெயரைச் சொல்லி மோசடி சம்பவங்கள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையில், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் அரசு அதிகாரி, பாஜக தொண்டன் என்று கூறிக் கொண்டு நாமக்கல் மற்றும் ஈரோடு பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் போலி அடையாள அட்டைகளை காட்டி மிரட்டி பணப் பறிப்பில் ஈடுபட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையத்தில் கோழிப் பண்ணை ஒன்று உள்ளது. இந்த கோழிப் பண்ணையில் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் என்று கூறி சிலர் மிரட்டி பணப் பறிப்புச் சம்பவத்தில் நேற்று ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, கோழிப் பண்னை உரிமையாளர்கள் எலச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சேலம், சன்னியாசிக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் ஐயனார் மற்றும் அவரது நண்பர் ரவி. இவர்கள் இருவரும் டாஸ்மாக்கில் மது அருந்தும்போது நண்பர்கள் ஆகியுள்ளனர். ஐயனார் சேலம் கிழக்கு மாவட்ட பாஜக ஓபிசி அணியில் பொறுப்பில் உள்ளார். ஐயனாரும், ரவியும் தாங்கள் இருவரும் நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி என்று கூறிக் கொண்டு பணப் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சேலம், நாமக்கல், ஈரோடு பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு காரில் நேரில் செல்வது, பின்னர் போலி அடையாள அட்டைகளைக் காட்டி மிரட்டி 50 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை பணப் பறிப்பில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதேபோல, நாமக்கல்லில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் நேற்று சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இவர்களைப் பார்த்ததும் சந்தேகமடைந்த கோழிப் பண்ணை உரிமையாளர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ஐயனார், ரவி இருவரையும் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் இருவரும் சேர்ந்து பல்வேறு வகையில் பொதுமக்கை ஏமாற்றி தொடர் பணப் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும், இவர்களுக்குப் பக்கபலமாக பாஜகவில் மாநில அளவில் பொறுப்பில் உள்ளவர்களின் பெயர்களையும் பயன்படுத்தியுள்ளனர். சேலத்தைச் சேர்ந்த இரு காவல் அதிகாரிகளிடம் நெருக்கமாக இருந்துள்ளதோடு, அதனால்தான் இத்தனை நாட்களாக இவர்கள் தப்பித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சேலம் பாஜக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ஏற்கனவே பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலமாக வீடு வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்கள் பலரிடம் லட்சக் கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு ஐயனார் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து தெரிந்தவுடன் ஐயனாரை கட்சியில் இருந்தே நீக்கிவிட்டோம். ஆனாலும், பாஜகவைச் சேர்ந்தவன் என்று கூறி இதுபோன்ற மோசடி செயலில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications