இது உங்களுக்கே ஓவரா தெரியலையா ஆபிசர்ஸ்.. அடிபம்புடன் சேர்த்து போடப்பட்ட விநோத தார் சாலையை பாருங்க
நாமக்கல்: தமிழக அரசுக்கு ஏணிபோல் இருந்து அரசு செயல்படுத்தும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கியமான பணியில் ஈடுபட்டு வருபவர்கள் அரசு ஊழியர்கள். ஆனால் ஒரு சில அரசு ஊழியர்கள் ஏதோ வேண்டாத வெறுப்பாக மக்களுக்கு பணி செய்வது வழக்கம்.
இந்த வார்த்தையை உறுதிபடுத்துவதுபோல் கொஞ்சம் கூட யோசிக்காமல் அரசு ஊழியர்கள் செய்த செயல்தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதனை பற்றிதான் இப்போது பார்க்க போகிறோம்.

செயல்படாத அடிபம்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில், 8-வது வார்டு பகுதியில் ஹவுசிங் போர்டு குடியிருப்பு அருகே ராசிபுரம் - புதுப்பாளையம் செல்லும் சாலையோரத்தில் அடிபம்பு ஒன்று உள்ளது
இதனை இப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக குடிநீர் தேவைக்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அடிபம்பு செயல்படவில்லை. ராசிபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டு குழியுமாக இருந்தன.

கேவலமான உலக சாதனை
தற்போது இந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு பெரும்பாலான பகுதிகளில் தற்போது புதிய தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 8வது வார்டில் உள்ள அடிபம்பை அகற்றாமல் அதனை சுற்றி அப்படியே தார் சாலை அமைத்து கேவலமான உலக சாதனை படைத்துள்ளனர் ராசிபுரம் நகராட்சி அதிகாரிகள்.

கொஞ்சம் கூட யோசிக்கவில்லை
ஒன்று அந்த அடிபம்பை சரிபார்த்து மக்கள் பயன்படும் வகையில் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் பழுதடைந்த அடிபம்பை அங்கு இருந்து அகற்றி இருக்க வேண்டும். ஆனால் இது இரண்டையும் செய்யாமல் கொஞ்சம் கூட யோசிக்காமல் மெத்தன போக்குடன் அடிபம்புடன் சேர்த்து சாலை அமைத்துள்ள அதிகாரிகளை என்னவென்று சொல்வது?

வினோதமான தார் சாலை
இப்படிப்பட்ட வினோதமான தார் சாலையை அமைத்த நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அடிபம்பை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் அல்லது அதனை அகற்ற வேண்டும். வீணாக பொதுமக்களின் வரிப்பணத்தை விரையம் செய்யக்கூடது என கோரிக்கை எழுந்துள்ளது. நகராட்சி அதிகாரிகள் அமைத்த இந்த சாலை தொடர்பான படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications