அழுதது ஒரு குத்தம்மா.. அதுக்கும் சேர்த்து பில் போட்ட மருத்துவமனை.. வைரலாகும் போட்டோ!
அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் அழுதற்காக நோயாளி ஒருவருக்கு கட்டணம் வசூலிக்கப்பட்ட விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவில் பெண் நோயாளி ஒருவர் சிகிச்சையின் போது அழுததற்காக அவரிடம் மருத்துவமனை நிர்வாகம் கட்டணம் வசூலித்தது சமூகவலைதளப்பதிவு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பொதுவாக குழந்தைகள் மருத்துவமனைக்கு செல்லும்போது அழுவது வழக்கம். ஊசிக்கு பயந்து பெரியவர்களும் சில சமயங்களில் அழுத கதைகளை நாம் கேட்டிருப்போம். ஆனால் அப்படி அழுததற்காக மருத்துவமனையில் அவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த கதையை கேட்டதுண்டா? அப்படியான ஒரு விநோத சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவின் பிரபல யூடியூபரான காமில் ஜான்சன் தனது சமூகவலைதளத்தில் இது பற்றிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பெங்களூரில் ஷாக்.. இஎஸ்ஐ மருத்துவமனையில் 1 வருடம் கழித்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளி சடலங்கள்
ஆதாரம்
அதில் அவர் மருத்துவமனை ரசீது ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் பலவகையான பரிசோதனைகளுக்கான கட்டணம் இடம்பெற்றுள்ளது. இதில் ஹைலைட் என்னவென்றால், 'Brief Emotional behavior assesment' என குறிப்பிட்டு, நோயாளி அழுதற்கான பரிசோதனை கட்டணமும் அந்த புகைப்படத்தில் உள்ளது.
அழுகைக்கு கட்டணம்
இது தொடர்பான தனது பதிவில் காமில் ஜான்சன், "எனது சகோதரிக்கு நீண்ட நாட்களாக ஒரு விநோத நோய் இருக்கிறது. அவள் எப்போதெல்லாம் விரக்தியாக உணர்கிறாளோ அப்போதெல்லாம் அவள் அழுதுவிடுவாள். அதற்காக அவள் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அந்த மருத்துவமனை அவள் அழுதற்காக கட்டணம் வசூலித்துள்ளது", எனக் குறிப்பிட்டுள்ளார்.
வேதனைப் பதிவு
மேலும், "எனது தங்கைக்கு மருத்துவர்கள் மன அழுத்தத்திற்காக எந்தப் பரிசோதனையும் செய்யவில்லை. மாத்திரைகளும் பரிந்துரைக்கவில்லை. நிபுணர்களை சந்திக்கும்படியும் ஆலோசனை வழங்கவில்லை. ஆனால் அவள் அழுததற்காக 40 அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் 3100) கட்டணம் வசூலித்திருக்கிறார்கள்", என காமில் அந்த பதிவில் வேதனை தெரிவித்துள்ளார்.
இது அநியாயம்
இதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ந்து போய்விட்டார்கள். மருத்துவமனைகளில் எக்கச்சக்க பரிசோதனைகள் செய்து நோயாளிகளிடம் இருந்து பணத்தை பறிக்கும் சம்பவங்கள் உலகம் முழுக்க நடப்பது தெரிந்த கதை தான். ஆனால் பரிசோதனையே செய்யாமல், ஒரு நோயாளி அழுதற்காக கட்டணம் வசூலிப்பது எல்லாம் ரொம்ப ஓவர் என தங்கள் கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
வைரல்
காமிலின் இந்த பதிவில் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒருவேளை காமில் சகோதரியின் மனஅழுத்தப் பிரச்சினை சிகிச்சைக்கான பரிசோதனைகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என கருதினாலும், இப்படி ஒரு கட்டணத்தை இதுவரை மக்கள் கேள்விப்பட்டதில்லை என்பதாலேயே ஆச்சர்யத்துடன் இந்தப் பதிவை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.