கறுப்பின மக்களைத் தொடர்ந்து இந்தியர் மீதும் இனவெறி தாக்குதல்.. அமெரிக்காவில் கொடுமை! என்ன நடக்கிறது?
நியூயார்க்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய பெண்களை தாக்கிய மெக்சிகோ-அமெரிக்க பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
எங்கு சென்றாலும் இந்தியர்களாக இருக்கிறீர்கள் என அந்த பெண்மணி இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் தரக்குறைவாகவும் பேசியுள்ளார்.
இந்த சம்பவத்தை கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்த இந்திய பெண்கள் இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
அமெரிக்கா என்பது உலகின் வல்லரசாக இருப்பதாக சொல்லிக்கொண்டாலும், உலகம் முழுவதும் அதிகம் துப்பாக்கிகளை வைத்திருக்கும் நாடு எனும் பட்டியலில் இதுதான் முதலில் உள்ளது. 100 கோடிக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் கூட இவ்வளவு துப்பாக்கிகளை மக்கள் வைத்திருப்பதில்லை. இது இப்படியாக இருக்க இந்நாட்டில் தொடர்ந்து கறுப்பின மக்கள் மீதான தாக்குதல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக தற்போது இந்தியர்களுக்கு எதிராகவும் அந்நாட்டில் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரத்தில் இந்திய பெண்கள் நால்வரை மெக்சிகோ-அமெரிக்க பெண் ஒருவர் இழிவாக பேசியதுடன் அவர் மீது தாக்குதலையும் நடத்தியுள்ளார். இப்பகுதியில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் புதன்கிழமை இரவு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மெக்சிகோ-அமெரிக்க பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வீடியோவில் அந்த பெண் இனரீதியாக இந்தியர்களை இழிவாக பேசுவது பதிவு செய்யப்பட்டுள்ளது. "இந்தியர்களாகிய நீங்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறீர்கள். உங்களை நான் வெறுக்கிறேன். நீங்கள் இந்நாட்டை சீரழிக்கிறீர்கள். எனவே மீண்டும் இந்தியாவுக்கே திரும்பி செல்லுங்கள்" என்றும் மேலும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தியும் இந்திய பெண்களை காயப்படுத்தியுள்ளார். மட்டுமல்லாது பேசிக்கொண்டே இரண்டு இந்திய பெண்கள் மீது தாக்குதலையும் நடத்தியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ டிவிட்டரில் பகிரப்பட்டது. பகிரப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் இந்த வீடியோ பல்வேறு தரப்பினரால் பகிரப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இந்த சர்ச்சைக்கு காரணமாக மெக்சிகோ-அமெரிக்க பெண்ணை காவல்துறை கைது செய்துள்ளது. வடக்கு டெக்சாஸின் இந்திய சங்கத்தின் தலைவர் உர்மீத் ஜுனேஜா இந்த சம்பவம் குறித்து கூறுகையில், "சட்ட அமலாக்க அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுத்து இந்த நபரைக் கைது செய்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இருப்பினும், அவர்கள் நியாயமான விசாரணையை நடத்தி இது போன்ற சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்" என்று கூறியுள்ளார்.