Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெட்ட வெளிச்சமானது.. உய்குர் முஸ்லிம்களை கொடுமைப்படுத்துவதா? சீனாவை விளாசி தள்ளிய ஐ.நா!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக சீனா மேற்கொள்ளும் அடக்குமுறையானது மனிதநேயத்துக்கு எதிரான குற்றம் என்று ஐ.நா. மனித உரிமை அமைப்பு காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சீனாவின் மேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் உய்குர் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். துருக்கியை பூர்வீகமாக கொண்ட இந்த இன மக்கள், சீனாவின் பாரம்பரிய இனக் குழுக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள் ஆவர். இதனால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே இந்த உய்குர் முஸ்லிம் சமூகத்தினர் மீது சீனா கடுமையான அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது.

எனினும், 2018-ம் ஆண்டு இந்த அடக்குமுறை உச்சத்தை தொட்டது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், மனித உரிமை அமைப்புகள் தான் இந்த விவகாரத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டின.

கட்டாய கருத்தடை, பன்றிக்கறி

கட்டாய கருத்தடை, பன்றிக்கறி

உய்குர் முஸ்லிம்கள் சீனாவுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி, அவர்களை கொன்று குவிக்கும் நடவடிக்கையில் சீன அரசு ஈடுபடுவதாக அந்த அமைப்புகள் செய்திகளை வெளியிட்டன. படுகொலை மட்டுமல்லாமல் உய்குர் முஸ்லிம் ஆண்களை கொடுஞ்சிறைகளில் அடைப்பது; பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்வது; உய்குர் முஸ்லிமகளை பன்றிக் கறியை கட்டாயப்படுத்தி உண்ணச் செய்வது போன்ற படுபயங்கரமான செயல்களில் சீன அரசு ஈடுபட்டதை இந்த அமைப்புகள் வெளிக்கொணர்ந்தன. இந்த விவகாரம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெரும்பாலான உலக நாடுகள் சீனாவின் இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

ஐநா அதிகாரிகள் ஆய்வு

ஐநா அதிகாரிகள் ஆய்வு

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான மிகப்பெரிய இனப்படுகொலையை சீனா செய்து வருவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டின. இதனால் உலக நாடுகளின் மொத்த பார்வையும் ஜின்ஜியாங் மாகாணத்தின் மீது விழுந்தது. இதன் தொடர்ச்சியாக, ஐ.நா. மனித உரிமை அமைப்பு ஜின்ஜியாங் மாகாணத்துக்கு சென்று கள ஆய்வு செய்ய முடிவு செய்தது. ஆனால், சீனா இதற்கு அனுமதி கொடுக்கவில்லை. உலக நாடுகள் கொடுத்த தொடர்ச்சியான அழுத்தங்களின் பேரில் கடந்த மே மாதம் தான் ஐ.நா. மனித உரிமை அமைப்புக்கு ஜின்ஜியாங் வர சீனா அனுமதி அளித்தது. இருந்தபோதிலும், சீன அதிகாரிகளின் மேற்பார்வையில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே ஆய்வு செய்ய ஐ.நா. மனித உரிமை அமைப்பினர் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அந்த இடங்களிலேயே மிக மோசமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருப்பதை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

 மனிதநேயத்துக்கு எதிரான குற்றம்

மனிதநேயத்துக்கு எதிரான குற்றம்

இந்த ஆய்வுக்கு பிறகு, உய்குர் முஸ்லிம்கள் தொடர்பான அறிக்கையை வெளியிடக் கூடாது என ஐ.நா.வுக்கு சீனா கடும் அழுத்தத்தை கொடுத்து வந்தது. ஆனால், அந்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் மிச்செல் பேச்லெட் வெளியிட்டார். தனது பதவிக்காலம் முடிவடைய 13 நிமிடங்களுக்கு முன்பு இந்த அறிக்கையை அவர் வெளியிட்டார். 45 பக்கங்கள் அடங்கிய அந்த அறிக்கையில், "ஜின்ஜியாங் மாகாணத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிம்கள் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த இன மக்களுக்கு எதிராக பல தன்னிச்சையான நடவடிக்கைகளில் சீன அரசு ஈடுபட்டுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைகள் சர்வதேச குற்றங்களுக்கு இணையானவை. குறிப்பாக, மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்களாக கூட இதனை கருத முடியும். உய்குர் முஸ்லிம்களை குறிவைத்தே பல பாரபட்சமான சட்டத்திட்டங்களை சீனா இயற்றியுள்ளது.

மனிதத்தன்மை அற்ற அந்த சட்டங்களை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, இந்த சட்டங்களை சீனா உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கொடுஞ்சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான உய்குர் முஸ்லிம்களை விடுவிக்க வேண்டும். மேலும், தங்கள் குடும்பத்தினர் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாமல் பரிதவிப்பில் இருப்பவர்களை அவர்களின் உறவுகளுடன் சேர்க்க சீனா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறிய 'இனப்படுகொலை' என்ற வார்த்தை ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா கண்டனம்

சீனா கண்டனம்

இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை அமைப்பின் இந்த அறிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐநாவுக்கான சீனாவின் நிரந்தரத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், "சீனாவுக்கு எதிரான சக்திகளால் ஜோடிக்கப்பட்ட பொய் தகவல்கள் நிரம்பிய அறிக்கையை ஐ.நா. வெளியிட்டிருக்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதே உண்மையான மனித உரிமை. அதனை உறுதி செய்யவே தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை சீனா மேற்கொண்டு வருகிறது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+